புது வரவு :
Home » , , , , » வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு?-நடந்தது என்ன?

வீரப்பன் கூட்டாளிகளுக்கு தூக்கு?-நடந்தது என்ன?

உலக அளவிலே கொடூர தண்டனையாக தூக்குத் தண்டனை கருதப்படுகிறது.அம்மாதிரியான தண்டனை இரக்கமற்ற செயல் எனக் கருதி பொருளாதாரத்திலும் வளர்ச்சியிலும் முன்னோக்கி உள்ள பல உலக நாடுகள் தூக்கை தூக்கி எறிந்துவிட்டது .ஆனாலும் உலக அளவில் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தன்னைக் காட்டிக்கொண்டிருக்கும் இந்தியக் குடியசு இன்னமும் தூக்குத்தண்டனையை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறது.இந்தியாவும் அத்தண்டனையை புறந்தள்ளும் என்று எதிர்பார்த்த நிலையில் மும்பை குண்டு வெடிப்பில் ஈடுபட்ட அப்துல் கசாப் மற்றும் பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல்குரு போன்றவர்களை தூக்கு மேடையில் ஏற்றி தூக்குத்தண்டனையே தேசத்துரோகிகளுக்கு சிறந்த தண்டனை என்பதை வலியுறுத்தி வருகிறது.





 பல குற்றவாளிகள் துக்குத்தண்டனைக்காக காத்திருக்கின்றனர் என்பது மிகவும் வருந்தத்தக்க செய்திதான்.அந்த காத்திருப்போர் பட்டியலில் இடம்பெற்றவர்கள்தான்  ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நால்வரும்.யார் இவர்கள்? தேச துரோகத்தில் ஈடுபட்டவர்கள் அல்ல.பத்தாண்டுகளுக்கு முன்பாக கர்நாடகாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிம்ம சொப்பனமாக இருந்த சந்தன வீரப்பனின் கூட்டாளிகள் என்று இரு அரசுகளும் சொல்கின்றன.இவர்களின் உடல்கள் தான் அடுத்து துக்கில் தொங்கப்போகிறது என்று அரசு உறுதிபடுத்திவிட்டது.

ஏன் இவர்களுக்கு தூக்கு?-நடந்தது என்ன?

1993 ம் ஆண்டு. சந்தனக் கடத்தல் வீரப்பனை பிடிக்க முடியாமல் தமிழக மற்றும் கர்நாடக மாநில அரசுகள் இரண்டும் திணறிக்கொண்டிருந்த காலம்.வீரப்பனை பிடிக்க அதிரடைப்படைகள் முன்னேறும்போட்து வீரப்பன் கூட்டாளிகளும் தாக்குதல் நடத்துவதுண்டு.வீரப்பன் கும்பல் நடத்திய பல்வேறு தாக்குதல்களில் போலீசார் உள்பட பலர் பலியாகி உள்ளனர்.1993–ம் ஆண்டு ஏப்ரல் 9–ந் தேதி மேட்டூர் அருகே பாலாறு என்ற இடத்தில் வீரப்பனும், அவனது கூட்டாளிகளும் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் கர்நாடக சிறப்பு அதிரடிப்படை தலைவர் டி.ஹரிகிருஷ்ணா, சப்–இன்ஸ்பெக்டர் சகீல் அகமது மற்றும் போலீசார், வனத்துறை அதிகாரிகள் உள்பட 22 பேர் உடல் சிதறி பலி ஆனார்கள்.மேலும் தமிழக சிறப்பு அதிரடிப்படை அதிகாரி கோபாலகிருஷ்ணன் உள்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

 இது தொடர்பாக 123 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. சம்பவம் நடந்த இடம் கர்நாடகத்தில் அமைந்துள்ளதால் அந்த மாநில போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். 123 பேர் மீதான வழக்கு விசாரணை மைசூரில் உள்ள ‘தடா’ கோர்ட்டில் நடைபெற்று வந்தது. அவர்களில் 14 பேர் குற்றவாளிகள் என ‘தடா’ கோர்ட்டு நீதிபதி டி.கிருஷ்ணப்பா தீர்ப்பு கூறினார். 12 பெண்கள் உள்பட 109 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.குற்றவாளிகள் என தீர்ப்பு அளிக்கப்பட்ட 14 பேரில் 6 பேர் ஏற்கனவே தண்டனை காலத்தை அனுபவித்து விட்டதால் அவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். மீதம் உள்ள 8 பேரில் ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் உள்பட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இவர்களில் மீசை மாதையன் சேலம் மாவட்டத்தில் உள்ள கொளத்தூரை அடுத்து கோட்டைமடுவு கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் சந்தன கடத்தல் வீரப்பனின் அண்ணன் மகன் ஆவார். ஞானப்பிரகாசம், சைமன், பிலவேந்திரன் ஆகிய மூவரும் கர்நாடக மாநிலம் அன்னூர் தாலுகாவைச் சேர்ந்த தமிழர்கள் ஆவார்கள்.

தடா’ கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை கர்நாடக ஐகோர்ட்டு உறுதி செய்ததை தொடர்ந்து, ஞானப்பிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நால்வரும் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர்.அந்த அப்பீல் மனுவை விசாரித்த நீதிபதிகள் ஒய்.கே.சபர்வால், பி.என்.அகர்வால் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டு டிவிஷன் பெஞ்சு கடந்த 2004–ம் ஆண்டு ஜனவரி 29–ந் தேதி, ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேருக்கும், ‘தடா’ கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை தூக்கு தண்டனையாக மாற்றி தீர்ப்பு கூறியது.குற்றவாளிகள் 4 பேரும் இந்த சமுதாயத்துக்கு பெரிய அபாயம் ஏற்படுத்தும் வகையில் குற்றம் புரிந்து உள்ளனர் என்றும், இவர்களுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்காவிட்டால் அது நீதியை அலட்சியப்படுத்தியது போன்ற செயலாகிவிடும் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தனர்.


அப்பீல் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டதால் நால்வரும் அதிர்ச்சி அடைந்தனர்.மரண தண்டனையில் இருந்து தப்பிக்கும் கடைசி முயற்சியாக 2004–ம் ஆண்டு பிப்ரவரி 12–ந் தேதி ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய 4 பேரும் ஜனாதிபதிக்கு கருணை மனுக்கள் தாக்கல் செய்தனர்.பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 4 பேரின் கருணை மனுக்களையும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த 11–ந் தேதி நிராகரித்தார்.இந்த தகவலை அவர்களுடைய வக்கீலும், மனித உரிமை ஆர்வலருமான பாலமுருகன் பத்திரிக்கைகளுக்கு 13 ந்தேதி தெரிவித்தார்.

ஞானபிரகாசம், சைமன், மீசை மாதையன், பிலவேந்திரன் ஆகிய நால்வரும் தற்போது கர்நாடக மாநிலம் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.அவர்களுடைய கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்ட விவரம் பெல்காம் சிறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், பின்னர் அவர்கள் அந்த தகவலை 4 பேரின் குடும்பத்தினருக்கும் தெரிவித்து இருப்பதாகவும் வக்கீல் பாலமுருகன் கூறினார்.

4 பேரின் கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு இருப்பதால் அவர்கள் விரைவில் தூக்கிலிடப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.இதுபற்றி கர்நாடக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்; 4 பேரின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டது பற்றி மைசூர் ‘தடா’ கோர்ட்டு நீதிபதி போலீஸ் அதிகாரிகளுடன் இன்று (வியாழக்கிழமை) ஆலோசனை நடத்த இருப்பதாகவும், 14 நாட்களுக்குள் தண்டனை நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தார்.பாராளுமன்ற தாக்குதல் தீவிரவாதி அப்சல் குருவின் கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர், கடந்த சனிக்கிழமை டெல்லி திகார் சிறையில் தூக்கில் போடப்பட்டார். இப்போது சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகளின் கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டு இருப்பதால் அவர்களும் தூக்கு கயிற்றை எதிர்நோக்கி காத்து இருக்கிறார்கள்.

இந்த நிலையில், கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி அல்டமாஸ் கபீரிடம் மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனுக்களை அவசர மனுக்களாக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்த தலைமை நீதிபதி, வழக்கமான நடைமுறையின்படி கோர்ட்டில் நேரடியாக மனு தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டார். அதன்படி, 4 பேருடைய சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் இன்று முறைப்படி மனு தாக்கல் செய்யப்படுகிறது. இந்த மனுக்கள் வரிசைப்படி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு தீர்ப்பு வழங்கப்படும்.இதற்கிடையில், 4 பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கான நடைமுறைப்பணிகள் தொடங்கி உள்ளன. 

தூக்கு போடப்படும் தேதியை விசாரணை கோர்ட்டான மைசூர் தடா கோர்ட்டு இன்று (திங்கட்கிழமை) அறிவிக்கும் என்று எதிர்பார்ப்பதாக, கர்நாடக மாநில சிறைத்துறை கூடுதல் போலீஸ் டி.ஜி.பி. ககன்தீப் தெரிவித்தார். ‘‘இது தொடர்பாக மைசூர் கோர்ட்டில் சிறைத்துறை அதிகாரிகள் திங்கட்கிழமை (இன்று) மனு தாக்கல் செய்ய இருக்கிறார்கள். 4 பேரையும் தூக்கிலிடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாக’’வும் ககன்தீப் கூறினார்.


வழக்கமான நடைமுறையின்படி, தூக்கு தண்டனை கைதிகள் 4 பேருக்கும் நேற்று மருத்துவ பரிசோதனை நடைபெற்றது. அதன்பின் சிறையின் மருத்துவ அதிகாரி டாக்டர் யமகன மரடி நிருபர்களிடம் பேசும்போது, ‘‘சோதனையின்போது 4 பேருடைய உடல்நிலையும் ஆரோக்கியமாக உள்ளது. மன அழுத்தம் எதுவும் அவர்களிடம் இல்லை’’ என்று தெரிவித்தார்.தற்போது வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரும் அடைக்கப்பட்டுள்ள பெல்காம் சிறையில், கடைசியாக 30 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கைதி தூக்கில் போடப்பட்டார். அப்போது பணியில் இருந்த தூக்கு போடும் ஊழியர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். இதனால், தூக்கு தண்டனையை நிறைவேற்ற அசோக் என்பவருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தூக்கு மேடையும் பராமரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

நிரபராதிகளான நால்வருக்கு தூக்குத் தண்டனை வழங்கப்படுவதாகவும் அதை உடனே ரத்து செய்யவேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கதறி வருகின்றனர்.இந்த நால்வருக்கும் எனது கணவர் வீரப்பனுக்கும் எந்த வித தொடர்பும் இல்லை.அவர்கள் அப்பாவிகள் அந்த நால்வரும் எனது கண்வரை பார்த்ததுகூட கிடையாது.எனவே அவர்களது துக்குத்தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.இந்தநிலையில் வீரப்பன் கூட்டாளிகள் 4 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வலியுறுத்தி சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய்யப்பட்டது. இன்று அந்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. விசாரணையில் சுப்ரீம் கோர்ட், வீரப்பன் கூட்டாளிகள் 4 பேரையும் வருகிற புதன்கிழமை வரை தூக்கிலிட கூடாது என இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

5 comments:

  1. பிற உயிரை கொல்பவர்களுக்கு உச்ச பட்ச தண்டனையாக நீங்கள் பரிந்துரைப்பது என்ன தண்டனை மதுமதி....

    ReplyDelete
    Replies
    1. ஆயுள் தண்டனையை விட கொடுமையான தண்டனை இல்லையென்பதே எனது கருத்து.

      Delete
  2. nalla thoguppu... Melum itharkku thalaippu NADAPPATHU/NADANDHU KONDIRUPPATHU ENNA? enru irundhal sariyaga irukkum ena ninaikkindren...

    ReplyDelete
  3. மரண தண்டனை பெரும்பாலும் அப்பாவிகளுக்கே கிடைக்குதுன்னு என் தனிப்பட்ட கருத்து

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com