புது வரவு :
Home » , » அப்படி என்னதான்யா இருக்கு புதுக்கோட்டையில?

அப்படி என்னதான்யா இருக்கு புதுக்கோட்டையில?

2015 அக்டோபர் திங்கள் 11 ம் நாள் புதுக்கோட்டையில் மிகப்பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் 4 ஆம் ஆண்டு பதிவர் சந்திப்பில் கலந்துகொள்ளும் வெளியூர் பதிவர்களுக்கு தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் புதுக்கோட்டை பூமி வரலாற்று பின்னணி கொண்டது.அந்த மாவட்டத்தில் சுற்றிப்பார்க்க வரலாற்று சிறப்பு வாய்ந்த அனேக இடங்கள் இருக்கின்றன.பதிவர் சந்திப்பு முடித்த கையோடு நீங்கள் விரும்பினால் அந்த இடங்களைச் சுற்றிப்பார்த்து விட்டு ஊர் திரும்பலாம்.நான் சுற்றிப்பார்க்க ஆசைப்படும் சில இடங்களைப்பற்றிய விபரங்களை கீழே தொகுத்திருக்கிறேன்.

தற்போதைய புதுக்கோட்டை பாண்டிய நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. நூறாண்டுகளுக்கு முன் இந்த மாவட்டம் சோழ, பல்லவ, ஹொய்சாள மன்னர்களால் ஆளப்பட்டது. 14ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசின் கீழ் இருந்த போது விஜய நகர மன்னர்கள் முஸ்லிம் மன்னர்களுடன் பல போர்களை புரிந்துள்ளனர். 1565ம் ஆண்டு தளிகோட்டாவில் நடந்த போரில் விஜயநகர மன்னர் தோற்றதால் பேரரசு நலிவடைந்தது. விஜயநகர பேரரசின் மாகாண பொறுப்பாளர்களாக இருந்த நாயக்கர்கள் இப்பகுதியை ஆண்டனர். 16 முதல் 17ம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் நாயக்கர்கள் புதுக்கோட்டையை ஆண்டுள்ளனர்.


புதுக்கோட்டை என்ற பகுதியை ஏற்படுத்தியவர் ரகுநாதராய தொண்டைமான் ஆவார். இவர் திருமயம் என்ற பகுதியின் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவர் ராமநாதபுர மகாராஜா ரகுநாத கிழவன் சேதுபதியின் மைத்துனர் ஆவார். தொண்டைமானின் சிறப்பான செயல்கள் காரணமாக சேதுபதி புதுக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளை அளித்தார். பின்னர் இந்த பகுதியை தொண்டைமான் மன்னர்கள் ராமநாதபுர அரசை சார்ந்தே இருந்து வந்தனர். 1763ம் ஆண்டு புதுக்கோட்டை ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் வந்தது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் 1948ம் ஆண்டு வரை தொண்டைமான் மன்னர்கள் புதுக்கோட்டையை ஆண்டு வந்தனர். இந்த மாவட்டம் திருச்சியின் ஒரு பகுதியாகவே செயல்பட்டு வந்தது. 1974ம் ஆண்டு ஜனவரி 14ம் தேதி புதுக்கோட்டை திருச்சி, தஞ்சையிலிருந்து பிரிக்கப்பட்டு தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.


ஞானாலயா ஆய்வு நூலகம், புதுக்கோட்டைக்கு அருகிலுள்ள திருக்கோகர்ணம் என்ற ஊரில் உள்ள தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய தனியார் நூலகமாகும்.  இது 1959 ஆம் ஆண்டு நூறு புத்தகங்களுடன் தொடங்கப்பட்டது. இந்நூலகத்தில் தற்சமயம் சுமார் 90,000 புத்தகங்கள் உள்ளன. இவை தவிர முக்கிய ஆவணங்களும், அரிய புகைப்படங்களும், பிரசுரமாகாத பிரபல அறிஞர்களின் கையெழுத்து கடிதங்களும் உள்ளன. 1920 முதல் 2010 வரை வெளியான தமிழ் இலக்கிய சிற்றிதழ்கள் மிக அதிக அளவில் உள்ளன. இந்நூலகம் அரிய முதல் பதிப்புகளைக் கொண்டுள்ள இந்தியாவிலுள்ள பெரிய தனியார் நூலகங்களில் ஒன்றாகும். ஜனவரி 31, 1942 முதல்   இந்தத் தனியார் நூலகத்தை தன்னுடைய மனைவியுடன் இணைந்து நடத்தி வருபவர் கிருஷ்ணமூர்த்தி ஆவார்.

இளம் வயது முதல் இவருக்கு நூல் சேமிக்கும் பழக்கம் இவருடைய தந்தை மூலமாக உருவாகி,இந்தியாவின் சிறந்த தனியார் நூலகங்களில் ஒன்றான ஞானாலயாவை சிறப்பாக நடத்திவருகின்றார்.இவருடைய நூல்களைச் சேகரிக்கும் ஆர்வத்திற்கு இவருடைய மனைவியும் புத்தக ஆர்வலருமான திருமதி டோரதி சிறந்த ஒத்துழைப்பை நல்கி வருகிறார். 


ஆவுடையார் கோயில் புதுக்கோட்டை மாவட்டத்தின் முக்கிய அம்சம் ஆகும். கொடுங்கை என்பது, சாய்வான கல் கூரையின் வளைந்த மேல் பகுதி  கோடுதல் என்றால் வளைதல் என்று, பொருள்படும். இதுவே கொடுங்கை என்ற, சொல்லுக்கு மூலம். இன்றும், கோட்டம் என்ற, சொல், வளைவு என்ற, பொருளில் பயன்படுத்தப்படுகிறது. சாய்வான கல் கூரை அமைப்பதே கடினம். அதிலும், மலரிதழ் போல வளைந்த கொடுங்கை அமைப்பது மிக மிக கடினம். இந்த கொடுங்கை தான், ஆவுடையார் கோவில், பஞ்சாட்சர மண்டபத்திற்கு சிறப்பு சேர்க்கும் அம்சம். இந்த மகத்தான மண்டபத்தில் உள்ள கல்வெட்டுகளில் தான், சைவ, சமய குரவர் நால்வருள், நான்காமவரான மாணிக்கவாசகர், இந்த கோவிலை கட்டுவித்ததாக, தகவல் பொறிக்கப்பட்டு உள்ளது என்று, சில ஊடகங்களில் செய்தி வெளியானது. இந்த ஊரின், பழம்பெயர் திருப்பெருந்துறை என்பது குறிப்பிடத்தக்கது. 



சித்தன்னவாசல்         புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறப்புமிக்க ஊர். குடைவரை ஓவியங்கள் மற்றும் குகை ஓவியங்களுக்கும் மிகப் புகழ் பெற்றவை. சித்தன்னவாயில் என்ற ஊரின் பெயர் கால ஓட்டத்தில் மாறி சித்தன்னவாசல் என்று ஆனது.சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7 மற்றும் 8 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இந்தியாவின் வட பகுதியில் காணப்படும் அஜந்தா ஓவியங்களை போன்று தனிச்சிறப்பு மிக்க இந்த ஓவியங்கள் சுமார் 1000 - 1200 ஆண்டு பழமையானவை.இந்தியா விடுதலை அடைந்த பிறகும் போதிய பராமரிப்பின்றி புகை படிந்து இருந்த இக்குகைகளும், குகை ஓவியங்களும் கி.பி 1990களில் நிறம் மங்க துவங்கியதால் செயற்கையாக நாம் தற்போது பயன்படுத்தும் வர்ணம் போன்ற பொருளைக் கொண்டு புதுப்பிக்கப்பட்டது. புதுக்கோட்டையில் இருந்து அன்னவாசல் செல்லும் வழியில் சுமார் 16 கிலோ மீட்டரில் அமைந்த இவ்விடத்தை தமிழக அரசும், தொல்லியல் துறையும் பாதுகாத்து வருகிறது. சுமார் 70 மீட்டர் உயரமே உள்ள இக்குன்றுகளின் மேல் சமணர்களின் படுக்கையும், தவம் செய்யும் இடமும், பல இடங்களில் குடைவறைகளும் காணப்படுகின்றன.சிறு மற்றும் பெரும் பாறைகளும் உள்ள இடம் சமண முனிவர்கள் தவம் செய்த இடமாக அறியப்படுகிறது. இவ்விடத்தின் மிக அருகில் உள்ள ஏலடிப்பட்டம் என்ற இடத்தில் சமணர்களின் படுக்கைகளும், தமிழ் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. அறிவர் கோயில் எனப்படுகின்ற சமண கோயில் ஒன்றும் இங்குள்ளது.


தமிழகத்தின் இரண்டாவது பெரிய அருங்காட்சியகமாக புதுக்கோட்டையில் உள்ள அருங்காட்சியகம் திகழ்கிறது.100 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட து இந்த அருங்காட்சியகம் என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த அருங்காட்சியகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக முதல்வர் ஆணைப்படி ரூ. 80 லட்சம் மதிப்பில் விலங்கியல் பிரிவில் காட்சிக் கூடங்கள் புதுப்பிக்கப்பட்டு தற்போது திறந்து வைக்கப்பட்டுள்ளன.புதுப்பிக்கப்பட்ட விலங்கியல் பிரிவில் வண்ணத்துப் பூச்சிகள், வண்டுகள், பட்டுப் பூச்சிகள், பவளங்கள், கடற்பஞ்சுகள், மெல்லுடலிகள், நட்சத்திர மீன்கள், இறால்கள், நண்டுகள், சிலந்திகள், மரவட்டைகள், தேள்கள், கடல் மற்றும் நில ஆமைகள், உடும்புகள், விஷப்பாம்புகள், மலைப்பாம்புகள், சுறாமீன்கள், கடற்குதிரைகள் உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் நவீன காட்சிப்பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்றுக் காலம் மற்றும் நவீன காலத்தை விளக்கும் வகையில் எண்ணற்ற அரும்பொருட்கள் காண்போரை கவரும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோருக்கு இந்த அருங்காட்சியகம் மிகுந்த பலனை அளிக்கும் என்பதில் மாற்றில்லை.

திருமயம் மலைக்கோட்டை புதுக்கோட்டையில் இருந்து 19 கி.மீ தொலைவில் திருமயம் உளளது.இது ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன. பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.


ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும் அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பாகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குடுமியான் மலை: தமிழகத்தில் கலைகளின் அரும் பொக்கிஷமாக விளங்குகிறது குடுமியான் மலை கல்வெட்டு. குறிப்பாக, இங்கு காணப்படும் இசைக் கல்வெட்டு உலகப் புகழ்பெற்ற தொன்மைவாய்ந்த இசைக்கல்வெட்டு ஆகும். உலகிலேயே முதல் இசைக்கல்வெட்டு என்று சிறப்பிக்கப்படும் பெருமை வாய்ந்தது. இக்கல்வெட்டு மிகவும் தெளிவாக இசைக் குறியீடுகளுடன் சிறப்பான முறையில் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. இது பாலி கிரந்தம் எழுத்துக்களால் வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டை பாராட்டி சோழ மன்னர்கள் சிறப்பித்துள்ள 13-ஆம் நூற்றாண்டு கல்வெட்டு அருகிலேயே காணப்படுகிறது. இக்கல்வெட்டின் பெருமையைக் கேள்விப்பட்டு அதனை ஆய்வு செய்ய இந்திய, வெளிநாட்டு இசை மேதைகள் பலரும் இங்கு வந்து செல்கின்றனர். மேலும் இக்கல்வெட்டில் நாட்டியம் சம்பந்தமான விஷயங்களும் இருப்பதாக சொல்லப்படுகின்றது. மிக தெளிவாகவும், இடைவெளிவிட்டும் ஏற்ற இறக்கம் இல்லாமல் இசைக் குறியீடுகளுடன் உள்ள இக்கல்வெட்டு மிகவும் சிறப்பானதாகும். இக்கல்வெட்டில் உள்ள இசை அமைப்புகள் அனேகமாக 'பரிவாதினி' எனும் யாழில் மீட்டக்கூடிய வண்ணம் எழுதப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

பிற்சேர்க்கை: தகவல்கள் கூகுளில் இருந்து சேகரிக்கப்பட்டவை..


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

11 comments:

  1. வணக்கம் கவிஞரே அருமையான சரித்திர விடயங்கள் நிறைய அறியத்தந்தமைக்கு நன்றி.
    தமிழ் மணம் + 1 அப்படிணு எழுதினால் நக்கல் அடிப்பீங்க அதுனாலே எழுதவில்லை.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி..அப்படியில்லை தோழர் பிடித்திருந்தால் வாக்களிக்கிறோம் அவ்வளவுதான்.. அதைவிடுத்து நான் போட்டிருக்கிறேன் பார்..நீயும் போடு என்பதைப் போல் எதற்கு?

      Delete
  2. நன்றி நண்பா. மிகவும் அருமையாக புதுக்கோட்டை பற்றிய வரலாற்றுக் குறிப்புகளைத் தொகுத்து வழங்கியமைக்கு நன்றி. ஆனால் சொல்ல வேண்டிய பெருமைகளோ இன்னும் ஏராளம். கலை, இலக்கிய தொன்மைச் சிறப்புகள் ஏராளம்! எனினும் எடுத்துச் சொல்லி விழாவுக்கு அழைத்த உங்கள் அன்பிற்கு நன்றியோ நன்றி.

    ReplyDelete
  3. அருமை வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. தகவலுக்கு நன்றி கவிஞரே!

    ReplyDelete
  5. கவிஞருக்கு நன்றிகள்...

    மற்ற நண்பர்களையும் பதிவுகளை பகிர்ந்து கொண்டால் கூடுதல் மகிழ்ச்சி...

    ReplyDelete
  6. நல்லாச் சொல்லிருக்கீங்க அண்ணே!

    ReplyDelete
  7. மிகச் சரியான நேரத்தில்
    அனைத்துப் பதிவர்களுக்கும் பயன்படும்படியாக
    புதுகை சுற்றியுள்ள அருமையான இடங்களை
    அருமையாக அறிமுகம் செய்தது அருமை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. புதுக்கோட்டையின் சிறப்பம்சங்களை சொல்லியமைக்கு நன்றி! புதுக்கோட்டை பதிவர் சந்திப்பும் சிறப்புக்களில் ஒன்றாக இடம்பெறும் என்பதில் ஐயமில்லை!

    ReplyDelete
  9. வலைப்பதிவர் திருவிழா களைகட்டிவிட்டது .புதுக்கோட்டை பற்றிய குறிப்புகள் தந்தமைக்கு நன்றி. மீண்டும் தொடர்ந்து பதிவுகளை எதிபார்க்கிறோம்

    ReplyDelete
  10. மிக அருமையாக புதுகையின் பெருமையை எடுத்துக்காட்டியமைக்கு மிக்க நன்றி....புதுகை வலைப்பதிவர் விழாக்குழு சார்பாக அன்புடன் விழாவிற்கு வரவேற்கின்றோம்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com