புது வரவு :
Home » » உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-3

உயிரைத் தின்று பசியாறு-அத்தியாயம்-3

                            உயிரைத் தின்று பசியாறு        #ராணி முத்து#
                                                                       மதுமதி
                                                        (க்ரைம்..க்ரைம்..க்ரைம்)

                   (இரண்டாவது அத்தியாயம் வாசிக்க இங்கே செல்லவும்.)
                                    அத்தியாயம்-3
      ங்கே..
             ரத்தம் சிந்திய வயிறோடு ஒரு சடலம் மல்லாந்து கிடந்தது.அலெக்ஸும், பூஜாவும் வியர்த்துப்போய் நின்றிருந்தனர்.
 "அலெக்ஸ்...பி...ண...ம்..."
            பூஜாவிற்கு பயத்தில் நாக்கு உளறியது.அலெக்ஸை கட்டிப் பிடித்தாள்.
"அ...லெக்ஸ்! வா... வா... போ... யிடுவோம்."
         
  அவனின் கைகளை இறுகப் பற்றி இழுத்தாள்.சிதறிக் கிடந்த நோட்டுப் புத்தகங்களை பொறுக்கிக்கொண்டு, பூஜாவின் இடது கையைப் பற்றியபடி வேகமாய் நடக்க ஆரம்பித்தான் அலெக்ஸ்.  யாராவது பார்க்கிறார்களா?' என்று திரும்பி திரும்பி பார்த்துக்கொண்டே நடந்தாள் பூஜா.
           அவளின் உடல் லேசான நடுக்கத்தை மேற்கொண்டது.மணற்பாதை கடந்து தார் ரோட்டுக்கு வந்துவிட்டனர். பேருந்து நிறுத்தத்தில் வியர்த்து விறுவிறுத்து நின்றிருந்தனர்.பூஜா இன்னும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை.திரும்பித் திரும்பி கடற்கரையை பார்த்தாள்.இருவரும் எதுவும் பேசவில்லை.இடத்தை காலி செய்தால் போதும் என்ற மனநிலைதான் இருவருக்கும்.பத்து நிமிடம் காத்திருந்தனர்.பேருந்து வந்தது.
            இருவரும் பேருந்தில் ஏறினர். மைலாப்பூருக்கு டிக்கெட் வாங்கினர். அரை மணி நேரத்தில் மைலாப்பூர் வர-இருவரும் இறங்கினர். பூஜா இன்னும் பேய் அறந்தாற்போலதான் இருந்தாள்.
"ஏய் பூஜா...ஏன் இப்படி இருக்க?ரிலாக்ஸ்"
"இல்ல அலெக்ஸ் எனக்கு ரொம்ப பயமா இருக்கு."
"பயப்படாம வா. போலீசுக்கு போன் பண்ணி சொல்லிடலாம்."
"வேண்டாம் அலெக்ஸ்."
  வியர்வையில் நனைந்தமுகத்தை துடைத்துக்கொண்டே சொன்னாள் பூஜா.
"இல்ல... வா,சொல்லிடலாம்."
  "எனக்கென்னமோ சரியாப் படலை அலெக்ஸ்"
  "நமக்கு ஒண்ணும் ஆகாது பூஜா பீச்சுல ஒரு கொலை நடந்துருக்கு போலீசுக்கு சொல்லாம இருக்கிறது தப்பில்லையா "
"அதுசரி அலெக்ஸ் நமக்கு ஏதாவது பிரச்சனைன்னா.."
"நமக்கு ஒரு பிரச்சனையும் வராது பூஜா நாமா கொலைபண்ணினோம்?"
"சரி அலெக்ஸ் உன்னோட செல்போன்ல பன்ணவேண்டாம்..ஒரு ரூபா காயின்ல பண்ணு..உன் பேர சொல்லவேண்டாம்"
"சரி பூஜா"
சொல்லிவிட்டு 'காயின் போன்' பெட்டியை நோக்கிப் போன அவன், தன்
சட்டைப்பையில் இருந்து ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்துப் போட்டு அவசர போலிசுக்கு தொடர்புகொண்டான்.
உடனே தொடர்பு கிடைத்தது.
"ஹலோ, அவசர போலீஸ்?"
"யெஸ் சொல்லுங்க"
"ச... சார் ! மெரினா பீச்சுல ஒ... ஒரு பிணம் கிடக்குது சார்.யாரோ கொலை பண்ணி போட்டிருக்காங்க"
"நீங்க யாரு... எங்கே இருந்து பேசறிங்க?"
எதிர்முனை கேட்க பட்டென ரிசீவரைச் சாத்தினான் அலெக்ஸ்.பத்தடி தூரத்தில் நகத்தைக் கடித்து துப்பிக்கொண்டிருந்த பூஜாவை நோக்கிப்போனான்.
"சொல்லிட்டியா"
"ம் சொல்லிட்டேன் பூஜா, மணி எட்டரை ஆச்சு. நீ கிளம்பு. பதட்டப்படாம
வீட்டுக்கு போ. நானும் கிளம்பறேன்."
           தலையாட்டினாள் பூஜா.
"பூஜா தயவு செய்து யாருக்கிட்டேயும் இதைப் பத்தி சொல்லிடாதே..முகத்தை நல்லா தொடச்சுக்கோ..எப்பவும் போல இரு"
அலெக்ஸ் சொல்ல... எதிர்ப்பட்ட தெருவுக்குள் பூஜா நுழைந்தாள்.பூஜாவின் தலை மறையும் வரை அவளையே பார்த்துக்கொண்டிருந்த அலெக்ஸ் வேளச்சேரி பேருந்துக்காக காத்துக் கிடந்தான்.

மெரினா கடற்கரை...
  போலிஸ் தலைகள் அந்த இடத்தை ஆக்கிரமித்து இருந்தன. வேடிக்கைப் பார்க்க பெரியளவில் கூட்டம் கூடவில்லை.
"ஆம்புலன்ஸ் அனுப்பியாச்சா"
கடற்கரை காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் அருள்மதி,பிணத்துக்கு முன்னால் குனிந்து ஒருமுறை பார்த்துவிட்டு  
"கான்ஸ்டபிள்...டார்ச்சை முகத்துல அடிங்க"
என்று சொல்ல 'டார்ச்' வெளிச்சம் சடலத்தின் முகத்தில் படர்ந்தது.
சடலத்தை உற்றுப் பார்த்தார் அருள்மதி...
உப்பிய வட்டமான முகம் மீசையைத் துறந்திருந்தது.வாய் பிளந்து கோணியிருந்தது.திறந்த நிலையில் இருந்த கண்களில் பயம் குடியிருந்தது.வயது முப்பதுக்குள் இருக்கலாம். சிவந்த மேனி, பணக்கார வர்க்கம் என்பது முகத்திலேயே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.அணிந்திருந்த வெள்ளை சட்டை பாதிக்கு மேல் சிவப்பாகியிருந்தது..வயிற்றுப் பகுதியில் பார்வையை கூர்மையாக்கினார்..
ரத்தம் முற்றிலும் உறைந்து போயிருந்தது.கத்தியால் குத்தப் பட்டிருக்கலாம் என்பதை எளிதாக யூகிக்க முடிந்தது. 
"முருகன்...இங்க வாங்க! பாடியோட 'பாக்கெட்டை செக் பண்ணுங்க."
அருள்மதி சொல்ல, அந்த போலிஸ்காரர் பிணத்தின் பாக்கெட்டை ஆராயத் தொடங்கினார்.சில வினாடிகள் தேடலுக்குப் பின் பிணத்தின் பாக்கெட்டில் இருந்தவற்றைச் சேகரித்து அருள்மதியிடம் கொடுத்தார். அவற்றை வாங்கிய அருள்மதி ஒவ்வொன்றாய் பார்வையிட்டார்.
கருப்பு நிற பெரிய 'பர்ஸ்', புதிய தொழில் நுட்பத்தில் தயாரான விலையுயர்ந்த ஒரு செல்போன்.
'பர்ஸை'ப் பிரித்துப் பார்த்தார். ஆறு ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள். அத்தனையும் புத்தம் புதுசு. அறுநூத்தி ஐம்பது ரூபாய் சில்லரை தாள்கள்..
இருபது ரூபாய்க்கு நாணயங்கள் இருந்தன. பர்ஸின் அடுத்த பகுதியைத் திறந்தார்.உள்ளே ரெண்டு மூணு விசிட்டிங் கார்டு,இரண்டு தனியார் வங்கிகளின் ஏ.டி.எம் கார்டுகள் இடம் பெற்றிருந்தன. ஒரு அடையாள அட்டை இருந்தது.அதை தனியாய் உருவிப் பார்த்தார்..புகைப்படத்தில் அழகாய் சிரித்துக்கொண்டு இருந்தான் அவன்.
'தினேஷ் எம்.பி.ஏ.' என்று எழுதப்பட்டு இருந்தது. அவதார் லெதர்ஸ் என்ற கம்பெனியின் குரோம்பேட்டை கிளை மேனேஜராக இருந்தான். கம்பெனியின் முழு முகவரி, போன் நம்பர் போன்றவை அந்த கார்டில் இடம்பெற்றிருந்தன.
முகவரியைப் படித்த அருள்மதி, இறந்தவன் தினேஷ்தான் என்று முடிவெடுத்தபடி பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுதது 'விசிட்டிங் கார்டி'ல் குறிப்பிட்டிருந்த தொலைபேசி எண்களை அழுத்தினான்.'ரிங்'போய்க்கொண்டே இருந்தது.ஓரிரு முயற்சிக்குப் பின் இணைப்பு கிடைத்தது. கம்பெனியின் வரவேற்பாளினி பேசினாள்.
"ஹலோ... மிஸ்டர் தினேஷ் இருக்காரா?" அருள்மதி
கேட்க,
"தினேஷா...?" என்று யோசித்தாள்
"யெஸ்.. உங்க கம்பெனி மானேஜர்."
"ஸாரி சார். அவர் வேலையை ரிஸைன் பண்ணி ஆறு மாசம் ஆச்சு நீங்க யார் எதுக்காக போன் பண்ணினீங்க.."
         அவள் முடிப்பதற்குள்...
"போலீஸ் ! ..
           என்று சொன்ன அருள்மதி
"உங்க ஜி.எம்.க்கு லைன் கொடுக்க முடியுமா?"
          என்று கேட்க,அந்தப் பெண், 
"ஒரு நிமிஷம் சார்" 
             சொல்லிவிட்டு இண்டர்காமில் ஜி.எம்மை தொடர்புகொண்டாள்.
"................."
"................."
சில வினாடிகளுக்கு பிறகு
"ஹலோ ... சார் நீங்க பேசுங்க ஜி.எம் லைன்ல இருக்கார்..." 
"வணக்கம் சார்..பீச் போலிஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் பேசறேன்."
"வணக்கம் இன்ஸ்பெக்டர் என்ன விசயமா போன் பண்ணினீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா"
''ம்..ஒரு தகவல் வேணும்"
"தகவலா..?என்ன தகவல்."
"உங்க கம்பெனியில தினேஷ்னு ஒருத்தர் வேலை பார்க்கிறாரா?"
"முதல்ல இருந்தார் . ஆறு மாசத்துக்கு முன்னாடியே வேலையை ராஜினாமா பண்ணிட்டு போயிட்டார்.எதுக்காக இப்ப அவரைப் பத்தி கேட்கறீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?" 
"மெரினா பீச்சுல அவர் கொலை செய்யப்பட்டிருக்கார்."
"மை காட்."
எதிர் முனையில் அவர் அதிர்ச்சி தெரிவிக்க , அருள்மதி தொடர்ந்தார்.
"உங்க பேர் என்னான்னு சொல்லலையே?"
"சுந்தரலிங்கம் இன்ஸ்பெக்டர்"
"மிஸ்டர் சுந்தரலிங்கம் ... தினேஷ் செல்போன் வச்சிருந்தாரா?"
"வச்சிருந்தார்."
"அவரோட செல்போன் நெம்பர் கொஞ்சம் சொல்ல முடியுமா?"
"பழைய நெம்பர்தான் இருக்கு , பரவாயில்லையா?"
"ஓ.கே..!சொல்லுங்க."
"ஒரு நிமிஷம்"
           என்ற சுந்தரலிங்கம், ஐந்தாறு விநாடிகளில்
செல்போன் எண்ணைச் சொன்னார்.
"ஓ.கே. சார்  நீங்க உடனே சென்ட்ரல் ஹி.எச் வரமுடியுமா..பாடியைப் பார்த்து தினேஷ்தான்னு கன்பார்ம் பண்ணனும்"
"உடனே வரேன் இன்ஸ்பெக்டர்"
இணைப்பு துண்டிக்கப்பட்டது.தன் செல்போனை பாக்கெட்டில் வைத்தார்.
"அருள்மதி..."
யாரோ அழைக்க திரும்பினார்..அங்கு க்ரைம் பிராஞ்ச் இன்ஸ்பெக்டர் சூர்யா நின்றிருந்தார்.ஆறடி உயரத்தில் இருந்தான்.
"சார்... உங்களுக்கு எப்ப தகவல் கிடைச்சது." 
"இப்பத்தான் தெரிஞ்சது... நேரா இங்க வந்துட்டேன் ஆம்புலன்ஸ் இன்னும் வரலையா?"
கேட்டுக்கொன்டே தன் செல்போனில் தொடர்புகொண்டார்.
"ஹலோ சூர்யா பேசறேன் . ஆம்புலன்ஸ் அனுப்பியாச்சா?"
"அனுப்பியாச்சு சார். இன்னும் அஞ்சு நிமிசத்துல அங்க வந்துடும்."
"ஓ.கே.
சொன்ன சூர்யா செல்போனை அனைத்தான்.
"பாரன்ஸிக் சோதனை எல்லாம் முடிஞ்சுதா?பிங்கர் பிரிட்ண்ட்ஸ் கலெக்ட் பண்ணியாச்சா"
"பண்ணிட்டிருக்காங்க சார்"
"அவரோட சட்டை, பேண்ட் எல்லாம் சோதனை பண்ணியாச்சா?"
"பண்ணியாச்சு சார்"
"ஏதாவது உபயோகமான தகவல் கிடைச்சுதா?"
சூர்யா கேட்க, சுந்தரலிங்கத்திடம் பேசியது வரை சொல்லி
முடித்தார் அருள்மதி.
"அப்படியா அவர் வந்து பாத்தாத்தான் கொலையானது தினேஷா இல்லையான்னு கன்பார்ம் பண்ணமுடியும் இல்லையா"
"ஆமாம் சார்..ஜி.எச்.வரச்சொல்லிட்டேன்"
                என்று அருள்மதி சொல்ல யோசனையோடு தினேஷின் உடலுக்கு அருகில் வந்து உற்றுப் பார்த்த சூர்யா,
"கான்ஸ்டபிள்... பிணத்தை கொஞ்சம் நகர்த்துங்க."
என்று சொல்ல அருகிலிருந்த அந்த கான்ஸ்டபிள் மெதுவாக தினேஷின் உடலை நகர்த்தினான். சூர்யாவின் கண்களுக்கு ஏதோ ஒன்று தென்பட ... பார்வையை கூர்மைப்படுத்தினார்.
"கான்ஸ்டபிள்... அதோ அது என்ன? அதைக்கொஞ்சம் எடுங்க."
அவர் குறிப்பிட்ட அந்தப் பொருளை கான்ஸ்டபிள் எடுத்து சூர்யாவிடம் கொடுத்தார். அதைப் பார்த்ததும் பிரகாசமானார் சூர்யா.அதை கான்ஸ்டபிளிடம் கொடுத்து பத்திரப்படுத்த சொல்லிவிட்டு 
"அருள்மதி..."
"சார்." 
"பிணத்தோட விரல்களை பிரிச்சுப் பார்த்தீங்களா?"
"இன்னும் இல்ல சார்.  பார்க்கிறேன்"
சொன்ன அருள்மதி, தினேஷின் விரல்களைப் பிரித்து பார்த்து...
"சார்..." என்றான்.
"என்ன...?" என்று கேட்டுக்கொண்டே சூர்யா அருகில்
வர,
"இங்கே பாருங்க சார்" என்று தினேஷின் இடது உள்ளங்கையைப் பிரித்து காட்ட, அதைப் பார்த்த சூர்யா முகத்தில் ஒரு குண்டு பல்பின் வெளிச்சம் படர்ந்தது.
-----------------------------------------------------------------------
                                                                                                                         (வெளிச்சம் படரும்)
நான்காவது அத்தியாயத்தை வாசிக்க இங்கே செல்லவும்.
------------------------------------------------------------------------------------------------------------
இந்த அத்தியாயத்தை தரவிறக்கம் செய்ய கீழே இருக்கும் இணைப்பில் செல்லவும்.
------------------------------------------------------------------------------------------------------------
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

24 comments:

  1. பிணத்தின் கையில் என்ன இருந்துச்சு? ஒவ்வொரு அத்தியாமும் சஸ்பென்ஸ் கூடிக்கொண்டே போகுதே....

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் தோழர்..கதை முடியும் வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

      Delete
  2. பிணத்துக்கு அருகில் இருந்து பிணத்தை நகர்த்தி, அவர் எடுத்த பொருள் என்னவென்று தெரியாது.ஆனால்,அது யாருடைய பொருளாயிருக்குமென்று ஊகிக்க முடிகிறது.
    பிணத்தின் கையில் இருந்தபொருள்பற்றி தெரியவில்லை.

    அது சரி, இடையில் ஒரு ஞாயிறு கதை வெளிவரவில்லையே?

    அடுத்த ஞாயிறும் விட்டுவிடவேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் யூகித்தது சரியா தவறாவென்று வருகின்ற அத்தியாயங்களில் தெரிந்து கொள்ளலாம் தோழர்.
      சென்ற ஞாயிறு பொங்கல் கொண்டாட எனது ஊரான ஈரோடு சென்றதால் பதிவிட முடியவில்லை.தாங்கள் தொடர்ந்து வாசிக்கிறீரகள் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது..இனி வாரவாரம் தொடரும்.நன்றி தோழர்..

      Delete
  3. முதல் இரண்டு அத்தியாயத்தையும் இன்றுதான் படித்தேன்.பயங்கர சஸ்பென்ஸ் த்ரில்லர்!

    ReplyDelete
    Replies
    1. அப்படியா ஐயா..மிக்க மகிழ்ச்சி..மிக்க நன்றி..

      Delete
  4. ஒவ்வொரு வரியும் ஒரு சிறு எதிர்பார்ப்பையாவது
    உண்டாக்கிக் கொண்டே நகர்வது
    கதைக்கு சிறப்பு....

    ReplyDelete
    Replies
    1. மகிழ்ச்சி தோழர்..நன்றி..

      Delete
  5. சீக்கிரம் முடிச்சுடுங்க சகோ. கதையை படிச்சுட்டு படுத்தால் பயத்துல தூக்கமே வரமாட்டேங்குது.

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சகோதரி..தூக்கத்தையே கதை கலைக்கிறதா?மகிழ்ச்சி..நன்றி..

      Delete
    2. பலமுறை முயன்றும் கடந்த மூன்று நாளாய்
      தங்கள் பதிவை வாசிக்கவும் வாக்கிடவும்
      மட்டுமே பதிலளிக்க வலை விரியவில்லை
      இது பற்றி என் வலையிலும் குறிப்பிட்டுள்ளேன்!
      இதுவும் பயர் பாக்ஸ் மூலமே எழுத
      முடிந்தது!
      தொடர் மிகவும் அருமை!

      சா இராமாநுசம்

      Delete
    3. நீங்களும் அடிக்கடி குறிப்பிடுகிறீர்கள்.எதனால் என்று தெரியவில்லை..சரி பார்க்கிறேன் ஐயா.
      நன்றி.

      Delete
  6. பிணத்தில் அருகில் என்ன இருந்தது என அறிய ஆவலை தூண்டுகிறது... சீக்கிரம் அடுத்த பதிவை போடுங்க சார்.. சஸ்பென்ஸ் தாங்கல

    ReplyDelete
  7. அப்படியா சசி மகிழ்ச்சி..அடுத்த வாரத்திலிருந்து வாரம் இரண்டு அத்தியாயங்களாக போட முயற்சிக்கிறேன்..நன்றி..

    ReplyDelete
  8. பாஸ் கதை விறுவிறுப்பிற்கு பஞ்சம் இல்லாமல் நகர்கின்றது சுவரஸ்யம் தொடருங்கள் தொடர்கின்றேன்

    ReplyDelete
  9. பயமாயிருக்கு மதுமதி !

    ReplyDelete
  10. அத்த்யாயத்தின் தொடர்ச்சி அருமையாக உள்ளது..

    ReplyDelete
  11. புலவர் சா இராமாநுசம்Jan 22, 2012 09:18 PM
    பலமுறை முயன்றும் கடந்த மூன்று நாளாய்
    தங்கள் பதிவை வாசிக்கவும் வாக்கிடவும்
    மட்டுமே பதிலளிக்க வலை விரியவில்லை
    இது பற்றி என் வலையிலும் குறிப்பிட்டுள்ளேன்!
    இதுவும் பயர் பாக்ஸ் மூலமே எழுத
    முடிந்தது!
    தொடர் மிகவும் அருமை!

    சா இராமாநுசம்///

    சில நாட்களாக உலவு பட்டையில் லோடிங் பிரச்சனை இருப்பதால் சிலரது தளம் ஓபன் ஆவதில் தாமதம் ஏற்படுகிறது... மற்றபடி வேறொன்றும் இல்லை ஐயா....

    ReplyDelete
  12. சஸ்பென்ஸ் கூடிக்கொண்டே.....

    ReplyDelete
  13. முதல் இரண்டு அத்தியாயங்களிலும் கொடுத்த ‘சஸ்பென்ஸை’ இதிலும் தொடர்ந்திருப்பது அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்நோக்க வைத்திருக்கிறது. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. கதையை நகர்த்திச் செல்லும் விதம்... நன்று.

    ReplyDelete
  15. இமா...

    மிக்க நன்றி..

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com