புது வரவு :
Home » » சென்னை பதிவர் சந்திப்பு - இறுதிக் கட்ட பரபரப்பு

சென்னை பதிவர் சந்திப்பு - இறுதிக் கட்ட பரபரப்பு

           வணக்கம் வலையுலக படைப்பாளிகளே!  கடந்த ஞாயிறன்று யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரம்மாண்ட முறையிலே சென்னையிலே பதிவர் சந்திப்பை நடத்தி முடித்துவிட்டீர்கள் என்று அலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் எம்மை தொடர்பு கொண்டு வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் சொல்லி வருகிறீர்கள்.ஏற்றுக்கொள்கிறோம்.எங்கள் உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாக அதை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறோம்.

         சனிக்கிழமை மாலை முதலே எங்களின் மனநிலை பதிவர் சந்திப்பை எப்படி நடத்தலாம் என்ற வினாவைத் தாங்கியபடியே இருந்தது.மாலை  ஏற்கனவே திட்டமிட்டபடி மண்டபத்தில் சந்தித்துக் கொண்டோம். எப்படி விழாவை கொண்டு செல்வது என்பதைப்பற்றி நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கும்போதே வெளியூரிலிருந்து முன்னமே வருகை தந்திருந்த பதிவர்கள் ஒவ்வொருவராக மண்டபத்திற்கு வர ஆரம்பித்து விட்டார்கள். அவர்களை வரவேற்று மகிழ்ந்தோம்.


         சனிக்கிழமை மாலை ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டபடி மண்டபத்தில் நான், புலவர் ஐயா, சென்னைப்பித்தன் ஐயா, மோகன் குமார், பாலகணேஷ், சிவக்குமார், மோகன்குமார், ஆரூர் மூனா செந்தில், செல்வின், பிரபாகர், சீனு, அக்கப்போரு ராஜா என கூடியிருந்தோம்.மூத்தப் பதிவர்களுக்கான பரிசுப்பொருளை வாங்கி வர அக்கப்போரு ராஜா,சீனுவை அழைத்துக் கொண்டு திருவல்லிக்கேணி சென்று விட்டார்.அந்த நேரம் மழை கொட்டோ கொட்டென்று கொட்டிக்கொண்டிருந்தது. அதையும் பொருட்படுத்தாமல் சென்ற இருவரையும் பாராட்டவேண்டும்.


            அன்று மாலை தயாராகி விடும் என்று நினைத்த பரிசுப்பொருட்கள் தயாராகவில்லை எனத் தெரிந்தவுடன் எங்கேயோ திரிந்து கொண்டிருந்த டென்சன், முதல் முறையாக எனக்குள் பரவியது.இன்று மதியமே தயாராகிவிடும் என்று நினைத்திருந்த பரிசுப்பொருள்கள் மின் தடையால் தயாராகவில்லையாம் என்று ராஜாவும் சீனுவும் சொன்னார்கள். அப்படியானால் நாளையும் இதே காரணத்திற்காக தயாராக இல்லாமற்போனால் என்ன செய்வது? என்ற வினா,கடைக்காரரிடம் அலைபேசியின் வாயிலாக தொடர்பு கொண்டு கோபத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தியது. நாளை(ஞாயிறு)காலை எட்டு மணிக்கு நானே வந்து தருவதாக கடைக்காரர் உறுதி படுத்திய பிறகே கோபம் தளர்ந்தது.


நான் தொடக்கவுரை ஆற்றிய போது


         காலையிலேயே வருகை தந்து தி.நகர் அறைகளிலே தங்கியிருந்த பதிவர்களை சொந்த பணி காரணமாக நேரில் சென்று வரவேற்க முடியவில்லை.அது ஒரு புறம் மனதில் ஓடிக்கொண்டேயிருந்தது.இந்த விழாவிற்கு பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றிய சந்தை.காம் குழுவினரையும் வரவேற்க முடியவில்லை.அவர்களுக்கு அலைபேசியிலேயே வழி சொல்லிக்கொண்டு  இருந்தேன்.அவர்கள் தங்குவதற்கு எந்த ஹோட்டலிலும் அறையில்லாததால் மணபத்திற்கு வரச்சொல்லிவிட்டேன். இதோ அரை மணி நேரத்தில் வந்து விடுகிறேன் என்று சொல்லி சொல்லியே நான்கு மணிநேரம்தான் கழித்துதான் என்னால் வரமுடிந்தது.அதே நேரம் மண்டப்பதிற்கு வந்திருந்த சிவக்குமார்,செவின்,பிரபாகரன் போன்றோர் அவர்களை வரவேற்றனர்.பண உதவி செய்தவர்களைக் கூட நேரில் வரவேற்க முடியவில்லையே என்ற குற்ற உணர்வோடுதான் அவர்களிடம் சென்றேன்.அதை அவர்கள் பெரிதாய் எடுத்துக் கொள்ளாதது அவர்களது பெருந்தன்மை.

          சந்தை.காம் நிறுவனத்தாரை  மண்டபத்தில் தங்க வைத்து விட்டு கிளம்பினோம்.புலவர் ஐயாவும் சென்னைப்பித்தன் ஐயாவும் அவரவர் வீட்டிற்குச் செல்ல, அறைகளில் தங்கியிருக்கும் பதிவர்களை வரவேற்பதற்காகவும் நேரடியாக மண்டபத்திற்கு வந்த பதிவர்களை அறைக்கு அழைத்து செல்வதற்காகவும் சிவக்குமார், செல்வின், ஆரூர்மூனா, ஜெயக்குமார், அரசன், குடந்தையூரார், திண்டுக்கல் தனபாலன் சென்று  விட, நான் மோகன் குமார் அவர்களை என் வாகனத்தில் ஏற்றி மாம்பலம் ரயில் நிறுத்தத்தில் இறக்கிவிட்டு விட்டு தி.நகரில் உள்ள அறைக்கு சென்று, வந்திருந்த தோழர்களை வரவேற்றோம்.அப்போது மணி இரவு 9.30 மணி.மழை விடாமல் கொட்டிக் கொண்டேயிருந்தது.நாங்கள் அங்கிருந்து கிளம்ப 10 மணி மேல் ஆகிவிட்டது.

மோகன் குமார் வரவேற்புரை ஆற்றியபோது


           10 மணிக்கெல்லாம் மேடை அலங்காரம் செய்யப்பட்டு தயாராக இருக்கும் என்று சொல்லியிருந்ததால் மண்டபத்திற்கு தொடர்பு கொண்டு கேட்டேன். இன்னும் மேடை அலங்காரம் செய்ய யாரும் வரவில்லை என்று சொன்னார்கள். இறக்கி வைத்திருந்த டென்சனை ஏற்றிக்கொண்டு நானும் அரசனும் மழையில் நனைந்தபடியே மண்டபம் வந்தோம்.நாளை விழா நடக்கப்போகிறது என்பதற்கு எந்த அடையாளமும் மண்டபத்தில் தென்படவில்லை.இரவு 11 மணியளவில் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு விசாரித்தால் மழை  நின்றவுடன் வந்து மேடை அலங்காரம் செய்துவிடுகிறோம் என்று சொன்னதாகச் சொன்னார்.

          மழை நிற்கவில்லை.12 மணிவரை காத்திருந்தும் அவர்கள் யாரையும் காணவில்லை.மழை தொடர்ந்து பெய்து அவர்கள் வராமற்போனால் அல்லது மறந்தபடி அவர்கள் உறங்கிப் போனால் என்ன செய்வது என்று யோசித்தபடியே நின்றோம்.அரசனை சாலிகிராமத்தில் விட்டுவிட்டு நான் மீண்டும் கோடம்பாக்கம் வரவேண்டும்.அதற்கு பதிலாக அரசனையும் என் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டேன்.உறங்குவதற்கு இரவு 2.30 மணியாகிவிட்டது.(விடிந்தால் மேடையில் பேச யாரைப்பற்றியும் குறிப்பெடுத்துக் கொள்ள அவகாசம் இல்லை)வேறு வழியின்றி தூங்கிவிட்டு ஏழு மணிக்கு மண்டபம் வந்தால் வாசலில் கட் அவுட் கூட பொருத்தப்படாமல் இருந்ததைக் கண்டு உச்சக்கட்ட கோபம் வர எதிரில் வந்த அலங்காரக்காரரிடம் அதை வெளிப்படுத்த,அவர் இப்பத்தான் மண்டபம் அலங்காரத்தை முடிச்சோம்.இன்னும் 10 நிமிஷத்துல போர்டு மாட்டிடுறோம் என்று சொல்ல,நிம்மதி பெருமூச்சு விட்டு அரங்கத்திற்குள் சென்றால் இன்னும் ஒரு படி கோபம்தான் அதிகரித்தது.மேடையின் மையத்தில்  தெர்மாக்கூலால் வெட்டி ஒட்டப்பட்டிருந்த 'தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம்'  என்பது 'தமிழ்வலைப்பதிவர்குழுமம்' என்றிருந்தது.வாசலில் போர்டை மாட்டிக் கொண்டிருந்தவரை மேலே அழைத்து வந்து அதை மாற்றம் செய்ய வைத்த போது மணி 8.30 .நாம் 9.30 மணிக்கு விழாவை ஆரம்பிப்பதாய் திட்டமிட்டிருக்கிறோம்.சரியாய் ஆரம்பித்து விடலாம் என்ற நிம்மதியோடு திரும்ப மேடையில் கம்பீரமாய் நின்று  ஒலிக்க வேண்டிய ஒலிபெருக்கி சார்ந்த அயிட்டங்கள் மண்டபத்தின் மூலையில் தூங்கிகொண்டிருந்தன. அதைப்பார்த்தவுடன் குப்பென்று வேர்க்க,உச்சக்கட்ட கோபத்துடன் ஒலிபெருக்கிக்காரரை அலைபேசியில் பிடித்து கன்னா பின்னாவென்று கத்த ஆரம்பித்துவிட்டேன்.அவர்,ஆளை அனுப்பிட்டேன்.இன்னும் பத்து நிமிசத்துல எல்லாத்தையும் ரெடி பண்ணிடுவார் என்று சொல்ல 10 மணி நிமிடம் காத்திருந்தால் யாரையும் காணோம்.


புலவர் ஐயா,சீனா ஐயா,சென்னைப்பித்தன் ஐயா

           இப்போது கிட்டத்தட்ட 50 பதிவர்கள் மண்டத்திற்கு வந்திருப்பார்கள். இந்நேரத்தில் மற்ற தோழர்கள் வந்தவர்களை வரவேற்றுக்கொண்டும் அடையாள அட்டை கொடுக்கும் பணிகளையும் நேரலை செய்ய ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருந்தார்கள்.மீண்டும் ஒலிபெருக்கிக்காரரை தொடர்பு கொண்டால் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று வருகிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை.மண்டப நிர்வாகியிடம் வேகமாகச் சென்று சொல்ல,அப்போது வேகமாக வந்த இளைஞன் இன்னும் பத்து நிமிசத்துல மைக் ரெடி பண்ணிடுறேன் சார் என்று சொல்லி மேலே சென்று அதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பிக்க,நேரலை செய்ய வந்த வலையகம் திரட்டி தோழர் லெனின் 'மேடையில் வெளிச்சம் குறைவாக இருக்கிறது.இரண்டு புறமும் பெரிய வெள்ளை விளக்குகளை மாட்டச் சொல்லுங்கள்' என்று சொல்ல,மைக்கை மாட்டிக் கொண்டிருந்தவனிடம் சென்று 'முதலில் லைட்டை போடுப்பா அப்புறம் மைக்கை மாட்டிக்கலாம்' என்று சொல்ல அவன் திரு திரு வென்று விழித்துவிட்டு 'எந்த லைட்டு சார் எந்த லைட்டும் கொண்டு வரலை' என்று சொல்ல உண்மையில் அவனை ஓங்கி அடித்து விடலாம் என்கின்ற அளவிற்கு கோபம் வந்தது. (3 வெள்ளை நிற பெரிய விளக்குகள் வேண்டும் என முன் பணம் கொடுக்கும்போதே  எழுதிக் கொடுத்திருந்தோம்)இந்த விசயத்தை லெனினிடம் சொல்ல,'அப்படியானால் வாய்ஸ் டெஸ்ட் எடுக்கலாம் மைக்கில் பேசிப்பாருங்கள்' என்று சொல்ல,திரும்பி வந்தால் மைக் மாட்டப்படாமல் இருந்தது.அவனையும் அங்கே காணோம்.சில நிமிடங்கள் மன உளைச்சலுக்கு மீண்டும் போக,அவன் வந்தான்.'எங்கப்பா போனே மைக்க மாட்டாம போயிட்டே' என்று சத்தம் போட்டால் அவன்,'நீங்க தான் லைட்ட மாட்டுன்னு சொன்னீங்க அதான் லைட்ட எடுக்க போயிட்டேன்' என்று சொல்ல வேறு வழியில்லாமல் 'சரிப்பா மைக்க மாட்டு' என்று சொல்ல அவன் 'சார் மைக்க மாட்டவா இல்லை லைட்ட மாட்டவா எது வேணுன்னான்.அந்த நேரத்திலும் அந்த கோபத்திலும் அந்த அப்பாவி இளைஞனைப் பார்த்து எனக்கு சிரிப்பாய்த்தானிருந்தது.(அவ்வப்போது காணாமல் போகும் அவனை தேடிக் கண்டு பிடித்து வந்தது தனிக்கதை)'தம்பீ ரெண்டும் வேணும் சீக்கிரம் மாட்டுப்பா' என்று பொறுமையாகச் சொல்ல இரண்டையும் செய்து முடித்துவிட்டான். மணி இப்போது பத்தை தாண்டியிருந்தது என நினைக்கிறேன்.புலவர் அதற்குள் மூன்று முறைக்கு மேல் ஆரம்பிக்கலாம் நேரமாகிறது என்று சொல்ல டென்சன் அதிகரித்துக் கொண்டே இருந்தது.ஒரு வேளையாக மேடையேறி வணக்கம் என்றால் பாவம் அந்த மைக் பஞ்சாலை சங்கைப் போல ஊத ஆரம்பித்தது.முன்னுரை வாசித்துவிட்டு தமிழ்த்தாய் வாழ்த்தை ஒலிக்க செய்துவிட்டு பெரியவர்களை மேடைக்கு அழைக்கலாம் என்பது திட்டம்.ஒருவேளையாக மேடையேறி முன்னுரை வாசித்துக் கொண்டிருக்கும் போது மேடையில் வந்து மோகன்குமாரா ஜெயக்குமாரா தெரியவில்லை அவன் தமிழ்த்தாய் வாழ்த்து சி.டி கொண்டு வரலையாங்க என்று சொல்ல குப்பென்று வேர்த்தது.வேறு வழியில்லை அனைவரும் சேர்ந்து பாடுவோம் எனச் சொல்லிவிட்டு நானும் பாட ஆரம்பித்தேன்.

வரவேற்பறையில் சீனு, கோகுல்


        மேடையில் மைக்கில் நான் பாடுவதற்கும் கிழே பதிவர்கள் பாடுவதற்கும் அலைவரிசை ஒத்து வரவில்லை.முதல் வரியையை முன்னதாக நான் எடுத்து பாட அடுத்த வரியை அவர்கள் முன்னதாக எடுத்துப்பாட ஏற்கனவே இருந்த டென்சன் காரணமாகவும் குழப்பத்தின் காரணமாகவும் நான் வரியை மாற்றிப்பாட மொத்தத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பிழையோடு பாட வேண்டியதாய்ப் போய்விட்டது.தமிழ்த்தாயை நம்பி பிழைத்துக் கொண்டிருக்கும் நான் இதற்காக தமிழ்த்தாயிடமும் மனோண்மணியம் சுந்தரம் பிள்ளையிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.

          தமிழ்த்தாய் வாழ்த்து பாடுவதில் மட்டும் இல்லை.வரவேற்புரை ஆற்ற வருகை தரும்படி வீடு திரும்பல் மோகன்குமாரை  மேடைக்கு அழைக்கிறேன் என்பதற்கு பதிலாக வீடு சுரேஸ்குமாரை மேடைக்கு அழைக்கிறேன் என்று சொன்னதும் மீண்டும் சரியாகச் சொலவதாக எண்ணி வீடு திரும்பல் சுரேஸ்குமாரை அழைக்கிறேன் என்று சொல்லி அதற்கு பிறகு வீடு திரும்பல் மோகன் குமார் என்று சொல்லி அழைத்ததும் புலவர் இராமானுசம் ஐயா பேச எழுந்ததைக் கூட கவனிக்காமல் சீனா ஐயாவை பேச அழைத்ததும் நிகழ்ச்சி தொகுப்பில் முன் அனுபவம் நிறைய இருந்தாலும் ஆங்காங்கே தடுமாறியதும் முன்னதாக ஏற்பட்ட மன உளைச்சலே காரணம் என்பதை சொல்லிக்கொள்கிறேன். விழா சிறப்பாக நடந்து முடிய வேண்டும் எங்கும் சிறு தவறு நேர்ந்து விடக்கூடாது என்று பதட்டத்தோடு இருப்பதை காட்டிக்கொள்ளாமல் என்னதான் நான் மறைத்திருந்தாலும் என் முகம் அதை அப்பட்டமாய் காட்டியிருப்பதை புகைப்படங்களிலும் காணொளிகளிலும் பார்த்தால் தெரியும்..

          அந்த மை செட் பையன் உணவு இடைவேளையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து சி.டி டையைக் கொண்டு வந்து போடட்டுமா என்றதும் நான் அவனை பரிதாபமாக பார்த்ததும் இறுதியில் தேசியம் கீதம் போடுகிறேன் பேர்வழி என்று கடைசி நான்கு வரிகளைப் போட்டதும் தனிக்கதை.

           கோபமே உங்களுக்கு வராதா என்று அடிக்கடி என்னிடம் ஜெயக்குமார் கேட்பார்.அது அன்று பொய்த்து விட்டது.
  
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

70 comments:

  1. வெற்றிகரமாக விழா நடந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி தோழரே!!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் .உங்கள் ஒத்துழைப்பிற்கு நன்றி

      Delete
  2. தோழரே, எந்த பெரிய நிகழ்ச்சியிலும் இத்தகைய சிறு இடங்கல்கள் இருக்கும்; இவற்றை இங்கு எழுத்தில் எழுதியது நிச்சயம் உங்கள் பெருந்தன்மையை காட்டுகிறது. இவற்றை நீங்கள் இங்கு எழுதா விட்டால் பலருக்கும் தெரியக்கூட செய்யாது !

    ஏராள பொறுப்புகளை நீங்கள் சுமந்தது தான் மிக சிறு தவறுகளுக்கு காரணம். திட்டமிடுவதே பெரிய வேலை. நீங்கள் அதையும் செய்து கொண்டு அதற்கான வேலையும் செய்வதால் இப்படி ஆகியிருக்கும் !

    விழாவில் மேடை நிகழ்வுகளை கவனிக்க ஒருவரும் கீழே உள்ள அந்த நேர பிரச்சனைகளை சமாளிக்க இன்னொருவரோ, அல்லது ஒரு குழுவோ இருக்க வேண்டும். மேடையில் உள்ள விழா குழுவினருக்கு கீழே உள்ள பிரச்சனைகள் கொண்டு போகவே கூடாது. மேடைக்கு கீழே உள்ளவர்களே அதை சமாளிக்க வேண்டும். இது கல்லூரியில் விழாக்களில் நாங்கள் எப்போதும் கடைபிடிக்கும் பாடம் !

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் தோழரே !அதை கடைபிடிக்கத் தவறியதால் தான் சிறு சிறு தவறுகள் நேர்ந்தது..

      Delete
  3. //அந்த மை செட் பையன் உணவு இடைவேளையின் போது தமிழ்த்தாய் வாழ்த்து சி.டி டையைக் கொண்டு வந்து போடட்டுமா என்றதும் //

    இப்படி வேற நடந்ததா. அப்போ டென்ஷனா இருந்தாலும் அவனது அறியாமையை இப்போ நினைச்சா இந்த வரி படிக்கும் போது சிரிப்பு வருது

    ReplyDelete
  4. விழா நல்லபடியாக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி நண்பரே! இந்த வெற்றிக்கரமான விழாவிற்கு பின்னால் எவ்வளவு பிரச்சனைகள் இருந்திருக்கின்றன? என்பதை இந்த பதிவு விளக்குகிறது. படிக்கும் போது, விழாவில் நேரில் இருந்து டென்ஷனை அனுபவிப்பது போல இருந்தது.

    //'சார் மைக்க மாட்டவா இல்லை லைட்ட மாட்டவா எது வேணுன்னான்.//

    ஹா...ஹா..ஹா.. அந்த மைக் செட் பையனை வீடியோவில் பார்த்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம் தோழர்.இப்போது நினைத்தால் சிரிப்புதான் வருது.

      Delete
  5. ஒரு நாவலுக்கு உள்ள விறுவிறுப்பை இங்கும் காட்டியிருக்கிறீர்கள் மது. நடை அருமை.

    ReplyDelete
  6. பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

    "மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?"

    http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி.

      Delete
  7. கல்யாணம் செய்து பார்,வீட்டைக்கட்டிப்பார் என்பார்கள்.இந்த விழாவும் ஒரு திருமணம் போலத்தான்.எத்தனை திட்டமிடல்,எத்தனை ஏற்பாடுகள்,எத்தனை அலைச்சல்.அனைத்தையும் செய்து மிக வெரிகரமாக விழாவை முடித்து விட்டீர்கள்.சின்னச் சங்கடங்கள் தவிர்க்க முடியாதவை.அவை குழைந்தைக்கு வைக்கும் திருஷ்டிப் பொட்டு மாதிரி. அதையெல்லாம் பெரிதாக எண்ணாதீர்கள் நீங்களும் உங்களுடன் உழைத்த அனைத்து நண்பர்களும் விழா வெற்றிக்குக் காரணமானவர்கள். பெருமிதப்படலாம்,..

    வாழ்த்துகள் மதுமதி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.நீங்கள் கூறியது முற்றிலும் உண்மை.ஒரு கல்யாணத்தை நிகழ்த்தி முடித்த திருப்தி ஏற்பட்டது ஐயா.

      Delete
  8. அன்பின் மதுமதி - அருமையானதொரு பதிவர் சந்திப்பினை அழகுற நடத்தியமை நன்று - அமைப்பாளர்களீன் ஒருங்கிணைப்பும், திட்ட்மிட்ட செயல்களூம், வழிகாட்டிய மூத்த பதிவர்களின் ஆலோசனைகளூம், அனைவரின் கடும் உழைப்பும், விழா சிறப்புற அமைந்தமைக்குக் காரணம். அன்பின் நண்ப, எந்த ஒரு நிகழ்ச்சியிலும் சிறு சிறு குறைகள் இருக்கத்தான் செய்யும். அவை தங்களீன் திறமைக்கும் திட்டத்திற்கும் அப்பாற்பட்டவை. அவை பற்றிக் கவலைப் பட வேண்டாம். தங்களின் புகைப்படத்தில் இருந்த தாடி மீசை எங்கே சென்றது ?

    சிறு தவறு கூட நடக்கக் கூடாதென்று முயலும் போது - அவை நடந்ததினால் ஏற்பட்ட மன அழுத்தம் தங்களைப் பாதித்திருக்கலாம். விட்டுத் தள்ளூங்கள் - இவை எல்லாம் இயல்பு.

    விழா சிறப்புற நடை பெற்றதென்பது தான் அனைத்துப் பதிவர்களின் ஒருமித்த கருத்து.

    நல்வாழ்த்துகள் நண்பா
    நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா.

      Delete
  9. உங்கள் வியர்வை துளி வெற்றி தளிர் ஆக துளிர் விட்டுள்ளது...

    ReplyDelete
    Replies
    1. என்னுடையது மட்டுமல்ல தோழரே..விழாவிற்கு தங்களால் இயன்ற அனைத்து பங்களிப்பையும் நல்கிய அனைவருக்கும் இந்த வெற்றியில் பங்கு உண்டு.நன்றி .

      Delete
  10. பட்ட கஷ்டம் ஒன்னொன்னும் நமக்குப் படிப்பினைன்னு எடுத்துக்குங்க. அடுத்த விழாவை இன்னும் நல்லா நடத்திடலாம். அதான் அனுபவம் ஏகப்பட்டது கிடைச்சுருச்சே!!!

    நம்ம ஊரில் மைக்செட் அலங்காரம் இதெல்லாம் செய்யும் மக்களுக்கு ஒரு நாள் முன்னதாவே தேதி சொல்லீங்கன்னா, கரெக்டா விழா அன்னிக்கு வேலை முடிச்சுக் குடுத்துருவாங்க.

    இத்தனை பெரிய விழாவை நல்ல முறையில் நடத்தி முடிச்சதுக்கு என் இனிய பாராட்டுகள்.

    எனக்குதான் வர இயலாமல் போச்சு:( நேரடி ஒளிபரப்புக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா..

      Delete
  11. விழா சிறப்பாக நடந்ததால், நீங்கள் குறிப்பிட்ட அந்த சிறுசிறு தடங்கல்கள் தெரியவில்லை.எந்த நிகழ்ச்சியிலும் இதுபோல சில இடையூறுகள் ஏற்படுவது இயற்கை. இருப்பினும் நீங்கள் பட்ட கஷ்டங்கள் வீண் போகவில்லை. எங்கள் அனைவருக்காக நீங்களும் உங்கள் குழுவினரும் எடுத்துக்கொண்ட பெரு முயற்சிக்கு எனது வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா..

      Delete
  12. பதிவர் சந்திப்புக்கும் மைக் செட்டுக்காரனுக்கும் எங்கியும் ஆகாது போல...!கோவை நிகழ்ச்சியில கடைசி நேரத்தில் மைக் வேலை செய்யாததால் பெரிய டென்சன் ஏற்ப்பட்டது.விடுங்கள் மதுமதி நல்லபடியாக நடந்ததே இதுவே மகிழ்ச்சி! நான் சில காரணங்களால் வர இயலவில்லை நீங்கள் வருத்தப்பட்டதாக நக்ஸ் கூறினார்...மன்னிக்கவும். பிறிதொரு சந்தர்ப்பத்தில் சந்திப்போம்!

    ReplyDelete
    Replies
    1. ஆம்!விரைவில் சந்திப்போம் தோழரே.

      Delete
  13. வாழ்த்துக்கள் சகோதரரே .அயராத முயற்சியினால் சிறப்பாக
    நடத்தி முடிந்த பதிவர் சந்திப்பிற்கு .இது முதல் சந்திப்பு .இதுவே
    இவ்வளவு சிறப்பாக உள்ளதென்றால் அடுத்த சந்திப்பு இன்னும்
    எவ்வளவு சிறப்பாக நடை பெற வழியுண்டு !...இதில் விடப்பட்ட
    குறைகளைக்கூட அடுத்த சந்திப்பில் சீர் செய்துகொள்ள முடியும் .
    அனுபவங்கள் எப்போதும் ஒரு அழகிய பாடம் .ஆதலால் மன நிறைவு
    கொள்ளுங்கள் .மீண்டும் மீண்டும் என் வாழ்த்துக்களும் நன்றியும்
    இந்த நிகழ்வில் அயராது உழைத்த அன்பு நெஞ்சங்களுக்கு .மிக்க
    நன்றி சகோ பகிர்வுக்கு .

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறுவது சரியே. அடுத்த அடுத்த சந்திப்புகள் இன்னும்
      சிறப்பாக நடை பெற அனுபவம் கைகொடுக்கும்.தங்கள் வருகைக்கு மிக்க நன்றி சகோதரி.

      Delete
  14. நான் சொல்ல நினைத்ததை திரு.சென்னை பித்தன் ஐயாவே சொல்லி விட்டார். ”கல்யாணம் பண்ணிப்பார்; வீட்டைக்கட்டிப்பார்”.

    இந்த மாபெரும் திருவிழா ஒரு கல்யாணம் மட்டுமல்ல. பல கல்யாணங்கள் சேர்ந்து நடத்துவது போலத்தான். பலவிதமான சிரமங்கள் பட்டுள்ளீர்கள். இது போன்ற நிலையில் டென்ஷன் ஆவதும், பொறுமைசாலிக்கும் கோபம் வருவதும், மிகவும் இயற்கை தான்.

    பொதுவாக இந்த விழா மிகவும் வெற்றிகரமாகவே நடந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் தங்களின் பங்களிப்பும், கடும் உழைப்பும் மிக அதிகமாகவே தெரிகிறது. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    இந்த ஒருசில கசப்பான அனுபவங்கள் கூட பிற்காலத்தில் இது போன்ற ஓர் விழாவினை திட்டமிட்டு நடத்தும்போது ஓர் முன்னெச்சரிக்கையாக நமக்கு உதவும்.

    இப்போது தான் Marriage Contract + Catering Contract என்றெல்லாம் வந்துள்ளது. அவை நம் வேலைப்பளுவை குறைக்கின்றது. பணம் மட்டும் இருந்தால் போதும். ஓரளவுக்கு எல்லாம் நடந்துவிடும் என நம்பிக்கை அளிக்கிறது.

    சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உறவுக்காரப் பெண்ணின் கல்யாணத்தின் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக்கொண்டேன். [எனக்கு அப்போது வயது 27]அதில் நான் பட்டபாடு எனக்கு மட்டுமே தெரியும்.

    ஏனோ தங்களின் இந்தப்பதிவினைப் படித்ததும் எனக்கு அந்த நினைவுகளே வந்தது. Complete coordination work with full of responsibility என்பது மிகவும் கஷ்டமான காரியமே. நம் பொறுமை பல இடங்களில் பல விதங்களிலும் பலராலும் சோதிக்கப்படும். எல்லாமே வாழ்க்கையில் ஒரு பாடம் தான்.

    பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள். அன்புடன் vgk

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் கூறியது போல நான் இதை ஒரு பாடமாகவே எடுத்துக் கொள்கிறேன்.தங்கள் வருகைக்கும் அன்பான வாழ்த்துக்கும் மிக்க நன்றி ஐயா..

      Delete
  15. செயல்கள் வெற்றியடையும்போது, அதன் நிம்மதியில் கஷ்டங்கள் மறைந்துவிடும்.
    விழாவின் வெற்றிக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி சகோதரி..

      Delete
  16. இந்த விழாவுக்கு நான் அவசியம் வருகை தந்து சிறப்பிக்க வேண்டும் என்று, தொலைபேயில் முதன் முதலாக, என்னுடன் ஒரு நாள் தாங்கள், உரையாடினீர்கள்.

    என்னுடைய தொலைபேசி என்னை மிகவும் கஷ்டப்பட்டு யார் யாரிடமோ தொடர்புகொண்டு, கடைசியில் எப்படியோ கேட்டு வாங்கினதாகச் சொன்னீர்கள்.

    தாங்கள் பேசிய பிறகு புலவர் இராமநுசம் ஐயாவையும் என்னுடன் பேச வைத்தீர்கள்.

    நான் அன்று மிக மிக மகிழ்ச்சியடைந்தேன், வியப்படைந்தேன். அன்றே தங்களின் ஆர்வம் மிக்க கடும் உழைப்பினை புரிந்து கொண்டு விட்டேன்.

    மிக்க நன்றி. அன்புடன் VGK

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் ஐயா.தங்களைக் காண இது ஒரு சந்தர்ப்பம் என்றே எண்ணியிருந்தேன்.பரவாயில்லை ஐயா.பிறிதொரு சந்தர்ப்பத்தில் தங்களைக் காண காத்திருக்கிறேன்.

      Delete
  17. ஐயா,
    தங்களின் முயற்சியும், உழைப்பும் நன்பர்கள் உறுதுணையும் இவ்விழா வெற்றிகரமாக நடைபெற உதவியது என்பதில் எள்ளலவும் ஐயமில்லை!
    உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த பாராட்டுக்கள்! சலங்கை ஒலி படத்தில் வரும் போட்டோ எடுக்கும் பையனை ஞாபகப் படுத்தியது மைக்செட் பையனின் செயல்கள்!
    நன்றியுடன்
    காரஞ்சன்(சேஷ்)

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி தோழர்..

      Delete
  18. மகிழ்ச்சியில் மனம் நிறைந்து இருக்கிறீர்கள் வெற்றிடம் எதுவும் இல்லை .........ஆகையில் பிழை சுட்ட வழியில்லை ......சென்னை குழுமத்தின் நண்பர்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் பணி சிறப்பிற்குரியது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோதரி.

      Delete
  19. ஜாலியா ஒரு மேட்டர் சொல்றேன்; உங்கள் ப்ளாகில் மேலே நீங்க போட்டுருக்க போட்டோவை மனசுல வச்சு உங்களை நேரில் பாக்குறவங்க ஏமாந்துடுவாங்க. சீக்கிரம் அந்த போட்டோ மாத்திட்டு புது போட்டோ போடவும்

    ReplyDelete
  20. அற்புதமான இந்த நிகழ்விற்கு திருஷ்டி என நினைத்துக் கொள்ளுங்கள் சகோ. அந்த நிலையிலும் தங்களிடம் இருந்த கோபம் வெளியே தெரியாது நிகழ்வை நடத்திச் சென்ற விதம் பாராட்டுகுரியது.

    ReplyDelete
  21. என்னிடம் கொடுத்த (நான் சரவணன் சாரிடம் கொடுத்த) அந்த விழா இதழ் தேடும் போது, அந்த சில நிமிடங்கள் மறக்க முடியாது... - இது ஒரு சின்ன சம்பவம்...

    ஆனால் விழாவிற்காக, "எத்தனை நாட்கள் உழைப்பு" என்று தெரியும்... புலவர் ஐயா, என்னிடம் சொன்னது போல் "செயல் வீரர்" நீங்கள் தான் சார்...

    தங்களுக்கும், மற்ற நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. உங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்.நீங்கள் குறிப்பிட்ட அச்சம்பவம் இப்போது நினைத்தால் மிக வேடிக்கையாக உள்ளது.

      Delete
  22. விழா சிறப்புற அமைய அரும்பாடுபட்ட தங்களின்,
    மற்றும் உங்களுக்கு உறுதுணையாக கூட இருந்த உங்கள் விழா குழுவினரின்,
    கடும் உழைப்புகளுக்கும் மிக்க நன்றி..!
    பதிவர் சந்திப்பு விழா சிறப்புற அமைந்ததற்கு மிக்க மகிழ்ச்சியுடன் பாராட்டுக்களும் கலந்துகொண்ட அனைவருக்கும் உரித்தாகுக...!

    ReplyDelete
    Replies
    1. பதிவர் சந்திப்பில் கலந்துகொண்டமைக்கு மிக்க மகிழ்ச்சி தோழர்.

      Delete
  23. வணக்கம் தோழர்..உங்களை நேரில் சந்திக்க முடியாவிட்டாலும் உங்கள் உரி நேரடி ஒளிபரப்பில் பார்த்தேன்....நிகழ்ச்சிகள் எதிர்பார்த்ததை விட நன்றாக அமைந்து விட்டது.வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..

      Delete
  24. பத்துமாதம் வயிற்றில் சுமக்கும்போது அடையும் வேதனை, குழந்தை பிறக்கும்போது கிடைக்கும் உவகையில் மறந்துபோகும். அதுபோல்தான் இதுவும் தோழரே. தவிர்க்க முடியாத காரணத்தால் விழாவை கண்டுகளிக்கும் வாய்ப்பை இழந்தேன். விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்திட்ட அனைத்து தோழர்களுக்கும் என் நன்றியும், வாழ்த்துகளும்.

    ReplyDelete
    Replies
    1. //
      பத்துமாதம் வயிற்றில் சுமக்கும்போது அடையும் வேதனை, குழந்தை பிறக்கும்போது கிடைக்கும் உவகையில் மறந்துபோகும். அதுபோல்தான் இதுவும் தோழரே
      //
      உண்மைதான் தோழரே.
      தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..

      Delete
  25. Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..

      Delete
  26. தங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்!! சரியான தூக்கம் இல்லையென்றால் யாருமே மறுநாள் கலையில் எரிச்சலுடனே இருப்பர்! தங்கள் செய்த சிறு சிறு பிழைகளை எழுதியது உங்களின் பெருந்தன்மையை காட்டுகிறது

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..

      Delete
  27. நல்ல அனுபவங்கள்! இந்த அனுபவங்களை நானும் பெற்றிருக்கிறேன்! அடுத்த சந்திப்பில் உதவ முயற்சிக்கிறேன்! இந்த முறை வர முடியாமல் போய்விட்டது!

    இன்று என் தளத்தில்
    பேய்கள் ஓய்வதில்லை! பகுதி6
    http://thalirssb.blogspot.in/2012/08/6.html
    மதுரை ஆதினம் அப்பல்லோவில் சேர்ப்பு!
    http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_28.html

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..விரைவில் சந்திப்போம்.

      Delete
  28. விழாவிற்கு வரமுடியாவிட்டாலும் நேரலையில் நிகல்ச்சின் பெரும்பகுதியை பார்த்தேன் ஐயா! நேரலைக்கு உழைத்த அத்தனை இதயங்களுக்கும் என் நன்றி!

    பதிவர் சந்திப்பிற்கான சிரத்தையான உங்கள் உழைப்பு நிச்சயம் போற்றப்பட வேண்டியது!

    ReplyDelete
  29. தங்கள் கடின உழைப்பிற்கு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..

      Delete
  30. அன்பின் இனிய மதுமதி!
    முதுமையால் இயலாமை காரணமாக,நான் வர இயலாத நிலையில் என் இல்லமே அலுவல இடமாக மாற, இப்பணி தொடங்கிய நாள் முதல் முடிவுவரை நாம் மூவரும்(நான் நீங்கள் செயக்குமார்)சந்திக்காத நாட்கள் உண்டா?அதிலும் குறிப்பாக சொல்லவேண்டுமென்றால் தம்பி செயக்குமார் இதய‍அறுவை செய்து கொண்டு ஓய்வில இருக்கும் நிலையில் நீண்ட தூரத்தில் இருந்து அழைத்த போதெல்லாம் ஓடிவந்து உழைத்த, உழைப்பை,நான் என்றும் மறவாது இருப்பேன் என்பதோடு என் உளங்கனிந்த நன்றியினை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்,

    மேலும் நாம் மணிக்கணகில் விவாதம் செய்யும் போதெல்லாம் படத்துறை அழைப்பையும் தாங்கள் தள்ளிவைத்த நிலையை நான் கண்டவன் உங்கள் அயராத உழைப்பும் முயற்சியுமே விழா வெற்றிபெற காரணமாகும் என்பதோடு அழைத்த போதெல்லாம் ஓடிவந்து உழைத்த, உழைப்பை,நான் என்றும் மறவாது இருப்பேன் என்பதோடு என் உளங்கனிந்த நன்றியினை உஙுகளுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். விழாவன்று தாங்கள் பட்ட துன்பங்களை தற்போதுதான் அறிந்தேன். வருத்தப்படுகிறேன்!அனத்துக்கும் காரணம் நாமோ என்ற குற்ற உணர்வு என்னை வெகுவாக வாட்டுகிறது. இனி எக்காரணம் கொண்டும் யாரும் துன்பப் பட முயலமாட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. அப்படியில்லை ஐயா..இரண்டு மூன்று தளங்களில் மதுமதி மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்தை தவறாக பாடிவிட்டார் என்று குறிப்பிட்டு சொல்லவும் அதற்கான விளக்கமாக இப்பதிவை எழுதினேன்.இல்லையென்றால் இப்பதிவை தவிர்த்திருப்பேன்.. வேறொன்றுமில்லை ஐயா.நன்றி

      Delete
  31. இது உங்களுடைய உழைப்பிற்கு கிடைத்த வெற்றியே. வீடு கட்டுவது கஷ்டமாக கூடா இருந்தாலும் தமாதபடுத்தி கொண்டால் தெரியாது. இந்த நிகழ்ச்சி கல்யாணத்தில் பெண்னின் தந்தை படுகிறா கஷ்டத்திற்கு ஒப்பனாது. எங்கே எதாவது இல்லை என்று தடைபட்டு விடுமோ அல்லது எங்கே எவனோ பிராச்சனை செய்து விடுவானே என்ற போன்ற அச்சங்கள் நிகழ்ச்சி முடியும் வரை நிகழ்ச்சி குழுவுக்கு இருக்கும். “முட்டை போடற கோழிக்கு தான் தெரியும் அதன் வருத்தம். ஆம்பெலைட் சாப்பிடகிறார்களுக்கு தெரியாது”
    நல்லபடியாக முடிந்தற்கு என்னுடைய மணமறந்தா வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. தங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..

      Delete
  32. சார் அதீத உழைப்பின் பலன்... விழாவின் வெற்றி ...

    ReplyDelete
  33. தோழரே...
    சிறு சிறு தவறுகள் வந்தாலும் விழாவில் தங்களின் அயராத பணி பற்றி யாவரும் அறிவார்கள்.
    நிகழ்ச்சி முடிந்த பின்னர் தங்களின் முகத்தில் ஓர் திருப்தி, மகிழ்ச்சி, என கண்டேன் தோழரே....

    ReplyDelete
  34. தங்கள் வாழ்த்துக்கு மிக்க நன்றி தோழர்..

    ReplyDelete
  35. கடின உழைப்பை கொடுத்தீர்கள்.அதற்கு கிடைத்த பரிசு வெற்றிகரமாக நடந்த விழா.பாராட்டுக்கள் நண்பரே.

    ReplyDelete
  36. கடினமாக உழைத்திருந்தாலும் சில சின்னச் சின்ன விஷயங்கள் படுத்திவிடும் - இங்கே தில்லியில் நான் இருக்கும் பகுதியில் மூன்று வருடங்கள் தொடர்ந்து பொங்கல் விழா - நாள் முழுதும் - போட்டிகள், பரிசுகள், பாராட்டுகள், உணவு என பல ஏற்பாடுகள் செய்திருக்கிறேன் - ஒரு நண்பரின் துணையோடு.

    இரவு முழுவதும் ஹிந்தி டெண்ட் காரர்களோடு போறாடி சரி செய்வதற்குள் ஒரு வழியாகிவிடும்.

    சில சில பிரச்சனைகள் இருந்தாலும் நடத்தி முடித்தபின் இருக்கும் திருப்தி - நிச்சயம் சில நாட்கள் உங்கள் நினைவில் பசுமையாக இருக்கும் நண்பரே.

    வாழ்த்துகள்.

    ReplyDelete
  37. உண்மை தான் ஐயா.தங்கள் வாழ்த்துக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. இந்த ஐயா வேண்டாமே மதுமதி! ... :) நாங்களும் யூத்து தான்! என்ன பத்தி மோகன் கிட்டயோ, கணேஷ் கிட்டயோ கேளுங்க!


      Delete
  38. தமிழ்தாய் வாழ்த்து மறந்ததை கலாய்ச்சு பண்ணி பதிவு போடலாம்னு நெனச்சேன்! ஆனா அதன் பின் இருக்கும் விஷயங்கள் இப்போது தான் புரிகிறது! இவ்வளவு வேலைகளுக்கும் டென்ஷன்களுக்கும் மத்தியிலும் கூட புன்னகையோட எங்கள் அனைவரையும் வரவேற்றதும், பேசியதும் மறக்க முடியாத நினைவுகள்!

    விழா ஏற்பாடு குழு திறமையாக செயல்பட்டது! வாழ்த்துகள்

    ReplyDelete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com