புது வரவு :
Home » , , , » டி.என்.பி.எஸ்.சி - சோழர்களின் ஆட்சி முறையும் நிர்வாகவும்

டி.என்.பி.எஸ்.சி - சோழர்களின் ஆட்சி முறையும் நிர்வாகவும்


சோழர்களின் ஆட்சிமுறை

வணக்கம் தோழர்களே.. இப்பக்கத்தில் சோழர்களின் ஆட்சி முறையும் நிர்வாகமும் தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளன. சோழர்களின் அரசு முடியாட்சியாகவே இருந்து வந்தபோதிலும், சங்ககாலத்துச் சோழர்களுக்கும், பிற்காலத்தில் ஆட்சிபுரிந்த சோழர்களின் முடியாட்சிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன. மன்னர்கள் கடவுளின் அவதரங்களாகக் கருதப்பட்டனர். இராஜராஜன் மற்றும் அவன் வழி வந்தவர்கள், அதிகாரத்திலும், ஆடம்பரத்திலும் மேம்பட்டவர்களாக இருந்தனர். தலைநகரமும், பல்வேறு துணைத் தலைநகரங்களும் இருந்தன. சமயங்களில் துணைத் தலைநகரங்களிலும் அரசவை கூடியது. அரசன், உயர்நிலைத் தலைவனாகவும், சர்வாதிகாரியாகவும் இருந்தான்.உரிய இடத்தில் அமர்ந்து மன்னன் விண்ணப்பங்களைக் கேட்பான்; அரசன் ஆணையே சட்டம்.முறையீடுகள் தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு வாய்மூலமாகக் கட்டளைகள் பிறப்பித்தல் அரசனுடைய நிர்வாகக் கடமையாக இருந்தது. இவற்றிற்குத் 'திருவாய்க் கேள்விகள்' என்று பெயர்.இவ்வாணையை உரியவருக்கு எழுத்து மூலம் அனுப்புகின்றவனுக்கு 'திருவாய்க் கேள்வி' என்றே பெயர். மன்னன் ஆணையைக் கோட்டத்து அவையினரான நாட்டார்கள் முதலியோர் நிறைவேற்றி வைப்பர்.

சோழர்களின் அரசுரிமை

அரசுரிமை பொதுவாக மூத்த ஆண் வாரிசுக்கே வழங்கப்பட்டது. சில சமயங்களில் அரசர்களின் தம்பிமார்கள் பட்டத்துக்கு வரும் வழக்கமும் காணப்பட்டது. பெரும்பாலும் அரசன் வாழும் காலத்திலேயே இளவரசர்களை நியமிக்கும் வழக்கம் இருந்தது. இதனால் வாரிசுப் போட்டிகள் பெருமளவு குறைவாகவே இருந்தன. நேரடி வாரிசுகள் இல்லாத போது அரச குடும்பத்திலிருந்து வேறொருவரை அரசனாக்கிய நிகழ்வுகளும் உண்டு. இரண்டாம் இராஜேந்திர சோழனின் பெண்வழி வாரிசாக முதலாம் குலோத்துங்கன் அரச பதவி பெற்றது இதற்கு எடுத்துக்காட்டு ஆகும். 
சோழர்களின் படைகள்

கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. காலாட்படையில் சிறப்பிடம் பெற்ற படை கைக்கோளப்படை. இவர்கள் தவிர வில்லெறியும் வில்லாளிகள், வாள்படைவீரர்கள் என்போரும் இருந்தனர். 'வலங்கை', 'இடங்கை' என இரு வகைப் பிரிவினர்கள் இருந்தனர். அரசருக்கு அணுக்கத்திலே இருக்கும் 'வேளகாரர்' என்போர் இருந்தனர். முதலாம் இராஜராஜன், முதலாம் இராஜேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.

உள்ளாட்சிப் பிரிவுகள்

சோழப் பேரரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது.
சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம்.இது ஊர் எனப்பட்டது.
கிராமங்கள் பல கொண்டது நாடு.இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். 
நாடுகள் பல கொண்டது வளநாடு.
வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். 
ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன. 
மண்டலங்கள், ஆளுநர்களின் பொறுப்பில் இருந்தன. அரசகுமாரர்களும், அரசனின் நெருங்கிய உறவினர்களும் இப்பதவியில் அமர்த்தப்பட்டனர். மண்டலங்களின் பாதுகாப்பு, ஒழுங்கு ஆகியவற்றைப் பராமரிப்பதும், கீழுள்ள நிர்வாகப் பிரிவுகளின் செயற்பாடுகளைக் கண்காணிப்பதும், ஆளுநர்களுடைய கடமையாக இருந்தது. மத்திய அரசுக்கும்,மண்டலங்களுக்கும் இடையிலான தொடர்புகளையும் நல்ல நிலையில் பேணிவருவதும் இவர்களுடைய கடமையாகும். கோட்டங்கள் மட்டத்திலிருந்த நிர்வாகிகள், மண்டல ஆளுநர்களுக்கு உதவியதுடன், கோட்டங்களில் அமைதி காத்து, சமுதாயப் பணிகளையும் கண்காணித்தனர்.

ஆட்சிக்கு உறுதுணையானோர் உடன்கூட்டத்து அதிகாரிகள் ஆவர். அமைச்சர்களும் இவர்களில் அடங்குவர். அரசாங்கத்திலோ படியிலோ உள்ள சிறந்தவர்கள் அதிகாரிகள் என்ற சிறப்புப் பெயர் பெறுவர். இவர்களுள் சிறுதரம், பெருந்தரம் என்ற இரு பிரிவுகள் இருந்தன. நீதிபதிகள் நியாயத்தார் எனப்பட்டனர். இவர்கள் உயர்குடிப்பிறப்பின் அடிப்படையிலேயே நியமிக்கப்பட்டனர். ஒரு கிராமம் முழுவதுமோ பகுதியாகவோ இவர்களுடைய ஊதியமாகத் தரப்பட்டது. இவற்றுக்கு சீவிதம் என்று பெயர். இறையிலி நிலங்களும் உண்டு. இந்நிலத்தில் அவர்களுக்கு அனைத்து உரிமையும் உண்டு.


அரசனின் ஆணைகளை கோட்டத்து அவையினர் என்போர் நிறைவேற்றுவர். மேலும் நாட்டார்கள், பிரமதேயக் கிழவர்கள், தேவதானத்து ஊர்களிலார், பள்ளிச்சந்தங்கள், கண்முற்றூட்டு, வெட்டிப்போறு, நகரர்கள் ஆகியோரும் நிறைவேற்றி வைப்பர். நாட்டார் சபையான நாடும் பிரம்தேயச் சபையும் ஊர்ச்சபையும் அரசாணையின் மேல் பிறப்பித்த கட்டளைகளை ஆவணத்தில் எழுதி வைத்திருப்பர். மதியஸ்தன் காரணத்தான் என்பவரே எழுதுபவர். சபைத் தலைவனுக்குத் திருவடிகள் என்ற பெயர். தானம் செய்யப்பட்ட ஊரின் எல்லைகளைக் குறித்த அரசாங்க அலுவலர் நால்வர் உண்டு. 
சோழர்களின் கிராம நிர்வாகம்

குடியிருப்புக்கள் கிராமங்கள், ஊர்கள், நகரங்கள் எனப் பிரிக்கப்பட்டிருந்தன. பிராமணர்களுடைய குடியிருப்புக்கள் கிராமங்கள் எனவும், சாதாரண மக்களுடைய குடியிருப்புக்கள் ஊர்கள் எனவும், வணிகர் குடியிருப்புக்கள் நகரங்கள் எனவும் வழங்கப்பட்டன. இவை தவிர உழுதுண்மக்கள் என்ப்படும் உழவர்கள் குழுக்களுக்கு சித்திரமேழி என்ற பெயர் இருந்தது. இவற்றை நிர்வாகம் செய்வதற்கெனக் கிராம சபைகள், ஊர் அவைகள், நகர சபைகள் போன்ற தன்னாட்சி அமைப்புக்கள் இருந்தன. சபையில் ஆட்டைவாரியம், தோட்ட வாரியம், ஏரிவாரியம், பஞ்ச வாரியம், பொன்வாரியம் எனப்பல பிரிவுகள் இருந்தன.இவற்றுக்கான உறுப்பினர்களுக்கான தகைமைகளும், அவர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் முறைகளும் இருந்தன. உறுப்பினர் தேர்வு குடவோலை முறைப்படி நிகழும். இச்சபையானது பெருங்குறி எனப்படும். வாரிய உறுப்பினர்கள் ' வரிய பெருமக்கள்' எனப்படுவர். இச்சபைகளும் வாரியங்களும் மரத்தடிகளிலேயே கூடும்.பிராமணர்கள் குடியிருந்த பகுதிகள் சதுர்வேதி மங்கலம் எனப்பட்டது.

குடவோலைமுறை

குடவோலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

குடவோலை முறை 9 வது நூற்றாண்டு முதல் 16ஆம் நூற்றாண்டு வரை நடைமுறையில் இருந்தது. இதற்கான ஆதாரமாக கி.மு. 907 முதல் 955 வரை ஆண்ட மன்னன் முதலாம் பராந்தகன் காலத்திய மூன்று கல்வெட்டுகள் கிடைக்கின்றன. இதில் இரண்டு உத்தரமேரூரிலும், மற்றொன்று தஞ்சைப் பள்ளிப்பாக்கம் கிராமத்திலும் கிடைத்துள்ளன.
Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com