புது வரவு :
Home » , » வேலியில் போகிற கொரோனாவைத் தூக்கி வேட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டாம்!

வேலியில் போகிற கொரோனாவைத் தூக்கி வேட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டாம்!

வணக்கம் நண்பர்களே! எப்படி இருக்கீங்க? பல மாதங்கள் கழித்து உங்களைச் சந்திக்கிறேன்.. உலகம் இப்படியான ஒரு சூழலை எதிர்கொள்ளும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. கண்ணுக்குத்தெரியா எதிரியை எதிர்க்க ஆயுதம் இல்லாத நிராயுதபாணியாக மனித இனம் தலை குனிந்து கிடக்கிறது.. ஆயுதம் இல்லை என்றாலும் கூட நாமே ஆயுதமாக மாற வேண்டியதுதான் ஒரே தீர்வு. இந்த மனித ஆயுதத்தை வேறு எந்த வேலைக்கும் பயன்படுத்தாமலும் யாருடனும் சேர்ந்து பழக விடாமலும் அநாவசியமாக வெளியே செல்லாமலும் பார்த்துக்கொள்ளவதே சாலச் சிறந்தது. 


நேற்று:

இந்தியா 130 கோடிக்கும் மேல் மக்கள் தொகையைக் கொண்ட நாடு.. இதில் பல கோடி பேருக்கு கொரோனா விழிப்புணர்வே இல்லாதது காலக்கொடுமை. உதாரணத்திற்கு 21 நாட்கள்  ஊரடங்கு அறிவித்த அன்று கூட்டம் கூட்டமாய் பேருந்துகளிலும் ரயில்களிலும் பயணித்த மக்களை பார்த்து பாதிக்கப்பட்ட அமெரிக்கர்களும் இத்தாலியர்களும் பதறித்தான் போயிருந்தார்கள். ஆனால் அந்தப் பதட்டம் நம்மில் யாருக்கும் இல்லாமல் போனது முரண். ஆனால் "ஊர் போய்ச் சேர்ந்து விடுவோமா?" என்கின்ற அந்த பதட்டம் வேண்டுமானாலும் இருந்து இருக்கலாம். "ஊருக்கு போகாமல் இருந்துவிட்டால் 21 நாள்களுக்கு சாப்பாட்டுத் தேவையை எப்படி பூர்த்தி செய்வது?" என்ற கேள்விக்கு விடை அந்த வெளியூர் பயணம்.. உயிரா? சாப்பாடா? என்ற கேள்வியை எழுப்புவதற்கு முன் "செத்தாலும் ஊர்ல போய் செத்துக் கொள்ளலாம்" என்ற பதில் நகைச்சுவையாக பலரிடமும் வந்த வண்ணம் இருந்தன.


ஊரடங்கு ஆரம்பித்த ஐந்தாம் நாள், நம் நாட்டின் தலைநகரமான டெல்லியில் தினக்கூலியாக பணியாற்றி வரும், பல்வேறு வட மாநிலங்களைச் சார்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்வதற்காக  திரண்டதைப் பார்த்த அக்கணம், இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் ஒரு பெரும் பீதி ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.. இதில் என்ன கொடுமை என்றால் அங்கு குழுமியிருந்த பல ஆயிரம் பேருக்கு எதற்கு சொந்த ஊர் செல்கிறோம்?.. அரசு அமல் படுத்தியிருக்கும் ஊரடங்கு எதற்கு? என்று எதுவும் தெரியாததுதான்.. இன்னும் சொல்லப்போனால் கொரோனோ என்கிற வார்த்தையைக்கூட அவர்கள் கேட்டிருக்க வாய்ப்பில்லை.காரணம்? உத்திரபிரதேசம், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து கட்டிடத் தொழில், ரிக்‌ஷா ஆட்டோ ஓட்டுதல் உள்ளிட்ட வேலை செய்வதற்காக வந்து பிழைப்பு நடத்திக்கொண்டிருக்கும் படிப்பறிவு இல்லாத மக்கள்.இதில் பலர் பேர் தங்க வீடின்றி சாலையோரம் கொட்டாய் அமைத்து தங்கி இருந்தவர்கள். இவர்களில் 98 சதவீதம் பேர் செய்திகளை பார்க்கும், படிக்கும், கேட்கும் பழக்கம் இல்லாதவர்கள் ஆகவே இவர்களுக்கு நடப்பு தெரியாமலும் புரியாமலும் போனதற்கு முக்கிய காரணம் தொலைதொடர்பு இல்லாமல் போனதுதான்.. 


ஒருநாள் சுய ஊரடங்கில் இறுதிப்பகுதியாக அவரவர் வீட்டில் நின்று கைதட்டி பாதுகாப்பு பணியாளர்களுக்கு பாராட்டு தெரிவியுங்கள் என்றுதான் பிரதமர் சொன்னார்.ஆனால் கும்பல் கும்பலாக அபார்ட்மெண்ட் வாசல்களிலும் தெருக்களில் மக்கள் சமூக இடைவெளியின்றி கைதட்டி ஆரவாரம் செய்தனர்..தொலைக்காட்சிகளில் காட்டப்பட்டவர்கள் அனைவருமே படித்த வர்க்கத்தினரே.. சமூக விலகலை அவர்களே கடைபிடிக்க தவறுகிறார்கள்.. அரசு ஊரடங்கில் ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து 9.09 வரை விளக்கு அல்லது டார்ச் மூலம் ஒளியேற்றி கொரோனாவுக்கு எதிராக ஒன்றாக இணைந்திருக்கிறோம் என்பதை உணர்த்துங்கள் என்றார் பிரதமர்.ஆனால் நம்ம மக்கள் என்ன செய்தார்கள்? ஒரேயடியாய் தீபாவளியே கொண்டாடிவிட்டார்கள்.. பெரும்பாலான மொட்டைமாடிகள் அமளி துமளியானது.


இன்று:
  

ஊரடங்கின் 17 ம் நாளில் இருக்கிறோம்.. இன்னும் ஒரு வாரத்தில் அரசு அறிவித்த ஊரடங்கு முடிய இருக்கிறது. 21 நாட்களில் ஓரளவு நிலைமை கட்டுக்குள் வந்து விடும் என்று நினைத்தோம்.ஆனால் அதற்கு பிறகு ஒரே நாளில் ஐந்து பேருக்கு தொற்று என்று ஆரம்பித்த செய்தியானது, ஒரே நாளில் 110 பேருக்கு தொற்று உறுதி என்னும் செய்தி கேட்டு கொஞ்சமாக அதிர்ந்தாலும் தற்போது அது கேட்டுக் கேட்டு பழகிப்போனது.. ஆரம்ப நாட்களில் அரசு தரப்பு செய்திகளை ஒரு வித பதட்டத்துடன் தொலைக்காட்சியில் பார்த்த  நமக்கு இப்போது கிரிக்கெட் ஸ்கோர் பார்ப்பது போல அசாதாரணமாகிவிட்டது. கேரளாவை முந்தி இரண்டாம் இடம் பிடித்தது தமிழகம்-ன்னு பரிசு அறிவிப்பதைப் போலத்தான் தொலைக்காட்சிகளின் சொல்லாடல்கள்..


நடப்பு செய்திகளை  வெளியிட ஊடகங்கள் போட்டா போட்டி போடுவது இயல்புதான். அதற்காக இன்று ஒரே நாளில் இத்தனை பேர் பலி அத்தனை பேர் பலி ன்னு ஆயிரக்கணக்கான ஊடகங்கள் உறுமினால் மனிதர்களின் மனநிலை எப்படி இருக்கும்? செய்தி உண்மைதான்..இல்லையென்று ஆகிவிடாது. ஆனால் அந்த ஒரு செய்தியை ஒரு வரி செய்தி, தலைப்பு செய்தி, விரிவான செய்தி, அலசல், பார்வை, விவாதம்ன்னு நாள் முழுக்க வெச்சு செய்கிறார்கள்.. கொரானா மனிதனின் நுரையீரலை பாதிக்கிறதோ  இல்லையோ இந்த ஊடகங்கள் மனிதனின் மனநிலை பாதிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. ஒலிம்பிக் போட்டி பதக்கப் பட்டியலை கட்டம் கட்டி காட்டுவதை போல கொரானா உயிர் இழப்பை கட்டம் கட்டி காட்டுவது ஊடகங்களின் பணியாக இருந்தாலும் மணிக்கொரு முறை மறு பிரசுரம் எதற்கு? அதுவே மனித மனநிலையின் நிம்மதியை நிர்மூலமாக்குகிறது.. கர்ப்பிணிகள், பெண்கள், குழந்தைகளின் நிம்மதியான தூக்கத்தை கொரோனா செய்திகள் கெடுக்கின்றன.. கொரோனாவுக்கு வயதானர்வர்கள்களே அதிக பலி என்னும் தண்டோரா செய்தி, வயதானவர்களின் உறுதித்தன்மையையும் பிடிப்பையும் நம்பிக்கையையும் தளர்த்தவே செய்யும்.தினசரி செய்திகளை இவர்கள் பார்ப்பதை தவிர்ப்பது நல்லது.

ஏப்ரல் 14 ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு விலக்கிக் கொள்ளப்படுமா? நீட்டிக்கப்படுமா? என்ற விவாதங்கள் ஊடங்களில் அரங்கேறிக்கொண்டுதான் இருக்கின்றன. மத்திய அரசும் மாநில அரசுகளும் இது குறித்து முடிவெடுப்பார்கள்..பல மாநில அரசுகள் இந்த ஊரடங்கை நீட்டிக்கலாம் என விண்ணப்பம் கொடுத்துள்ளன.அதிகமான நோய்த்தொற்று இருக்கும்  274 மாவட்டங்களை மட்டும் முற்றிலும் முடக்கலாம் எனவும் பிற மாவட்டங்களில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தலாம் எனவும் செய்திகள் சொல்கின்றன. இன்னும் தமிழகத்தில் 10 ஆம் வகுப்புத் தேர்வுகள் நடைபெறாமல் இருக்கின்றன. மாணவர்களின் எதிர்காலம் பாதிப்படையாத வகையில் அரசு ஒரு முடிவை எடுக்கட்டும்.ஊரடங்கு நீட்டிப்பு குறித்து அரசு முடிவெடுக்கும் வரை காத்திருப்போம். அதை யோசித்து குழம்ப வேண்டாம்.. 


நாளை:

ஊரடங்கு நீடித்தால் என்ன ? நீடிக்காவிட்டால் என்ன? சுய கட்டுப்பாடு என்பது அனைவருக்கும் இருக்கு தானே..

சமூக விலகல் மட்டும் தான் இதற்கான தீர்வு என்று நம்புகிறோம் தானே..

"மனுஷன், நிலவுக்கு ராக்கெட் அனுப்பி என்ன செய்ய?  கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கல" என சிலர் கலாய்க்கும் போது நாமும் சேர்ந்து சிரித்தோம் தானே..

இன்றுவரை மருந்து இல்லையென்ற நிலையில்தான் உலகம் உள்ளது உண்மை தானே..

வளர்ந்த ஐரோப்பா அல்லோலப் படுவடுவதையும் அமெரிக்க ஐக்கியம் அலறுவதையும் பார்க்கிறோம் தானே..

தனித்த வார்டில் கேட்பாரன்றி, பார்ப்பாரின்றி, மருந்தின்றி, அரவணைப்பின்றி, ஆறுதலின்றி 14 நாட்கள் உயிர்பயத்தோடு லட்சக்கணக்கானோர் இருப்பது உண்மைதானே..

கொரோனா தொற்று உள்ளவனை கண்டு பிடிக்க இயலாது என்பது உண்மைதானே..

கொரோனாவின் இறப்பு எண்ணிக்கை ஒரு லட்சத்தை நெருங்குவது உண்மைதானே..

கொரோனா ஒரு உயிர்கொல்லி என்பது உண்மைதானே..  

இத்தனை தெரிந்திருந்தும் நமக்கு ஏன் உயிர்பயம் வரவில்லை..

நமக்கு விழிப்புணர்வு இல்லையா? உதாசீனப்படுத்துகிறோமா?

நம் வீட்டு விலாசம் கொரோனாவுக்கு தெரியுமா? 
நமக்கே தெரியாமல் நாம் தானே அழைத்துச் செல்கிறோம்.. 

நம் நாட்டுக்கு வரட்டும் பார்க்கலாம் என்று சொன்னோம்.. வந்து விட்டது.. ஆனாலும் உஷார் ஆகாமல் உதார் விட்டுக்கொண்டு ஊர் சுற்றிக்கொண்டிருக்கிறோம்.. ஒருவேளை நம் வீட்டிற்குள் வந்தால் தான் அடங்குவோமா?

வேலியில போகிற கொரோனாவைத் தூக்கி வேட்டிக்குள் விட்டுக்கொள்ள வேண்டாம் அன்பர்களே..

சமூக விலகலை கடைபிடிப்பதால் நம்மையும் நம் வீட்டையும் நம் நாட்டையும் காப்பாற்ற முடியும்..


கொரோனோவுக்கு தற்போது இருக்கும் ஒரே ஒரு அருமருந்து  சமூக இடைவெளி காத்தல் மட்டுமே..


இத்தனை நாட்களை கடந்தது பெரிய விசயம் அல்ல..இனிமேல் கடக்க போகும் நாட்கள் அதி முக்கியமானவை.. இரண்டாம் கட்டத்திலேயே கொரோனாவை கொலை செய்வோம்!!.. மூன்றாம் கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டாம்!!! 

கொரோனோ  பரவும் முக்கியக்காரணி மனிதன் மட்டும் தான்.கடவுளோ, மதமோ, ஜாதியோ இல்லை.. அதேபோல கொரோனோவிடமிருந்து மனிதனை காப்பாற்ற துடிப்பது கடவுளோ ,மதமோ, ஜாதியோ இல்லை. மருத்துவர், செவிலியர், காவல் துறையினர், அரசு ஊழியர்கள்  தான். ஆகையால் மதத்தை மறந்து மனிதம் போற்றுவோம்..

                                                                                                                          - மதுமதி


Download As PDF
Share this article :
புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

2 comments:

  1. வாங்க தலைவரே... மகிழ்ச்சி... நல்லதொரு விழிப்புணர்வு பதிவு...

    சிந்தனைகள் தொடரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. எப்படி இருக்கீங்க தலைவரே..

      Delete

கருத்துரைப் பெட்டியில் இடும் கருத்துகளுக்கு கருதிட்டவரே பொறுப்பாவர்..

Search This Blog

Email Subscribers

புதிய பதிவுகளை ஈமெயிலில் பெற

Followers

Popular Posts

Google+

Tips Tricks And Tutorials

TNPSC - முக்கிய வினா-விடைகள்

எழுதிய மாத நாவல்கள் சில

 
Support :
Written by Madhumathi Published by www.madhumathi.com